பெண்டிங் மட்டும் இருந்துச்சுனா என்னை செருப்பால அடிங்க: தாறுமாறாய் கத்திய திருச்சி டி.எஸ்.ஓ
திருச்சி: திருச்சியில் மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி ஒருவர் என்னை செருப்பால அடிங்க என்று கூச்சலிட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கே.கே.நகரில் இருந்து ஓலையூர் செல்லும் வழியில் உள்ளது இச்சிகாமலைப்பட்டி எம்.ஜி.ஆர் நகர். இங்கு வசித்து வருபவர் முகமது இப்ராகிம். தனது குடும்ப அட்டை காணாமல் போய்விட்டதால் இவர் புதிதாக நகல் அட்டை வழங்கும்படி கேட்டு திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தார். ஆனால் 6 மாதங்கள் ஆகியும் அவருக்கு புதிய குடும்ப அட்டை வந்து சேரவில்லை.
இதுபற்றி விவரம் கேட்பதற்காக முகமது இப்ராகிம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்திற்கு காலை வந்தார்.
மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் தனக்கு சரியான பதில் அளிக்கப்படவில்லை, குடும்ப அட்டைக்காக என்னை 6 மாதமாக அலைய விடுகிறார்கள், ஒரு ஏழையை இப்படி அலைய விடுவது நியாயமா? என ஆவேசம் அடைந்தவராக கோஷம் போட்டார். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அவரை மாவட்ட வழங்கல் அதிகாரி ராஜேந்திரனிடம் அழைத்து சென்றனர். அவர் உடனடியாக மாவட்ட வழங்கல் அலுவலக ஊழியர்களை அழைத்து விசாரணை நடத்தினார். அடுத்த 5 ஆவது நிமிடம் அவரது கைக்கு முகமது இப்ராகிமுக்கான குடும்ப அட்டை வந்து சேர்ந்தது.
மாவட்ட வழங்கல் அதிகாரி ராஜேந்திரன் அதனை முகமது இப்ராகிமிடம் கொடுத்தார். அவர் அதனை வாங்கி படித்து பார்த்து விட்டு தனது வீட்டு முகவரி தவறுதலாக குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும், முகவரி ஆதாரத்திற்காக அடையாள அட்டைகள் உள்பட 10 ஆதாரங்களை கொடுத்தது எதற்காக என கேட்டார். மேலும் தனது வீட்டில் ஒரு சிலிண்டர் தான் இருப்பதாகவும், குடும்ப அட்டையில் தவறுதலாக 2 என இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
இந்த தவறுகளை எல்லாம் திருத்தி இன்று மாலைக்குள் எனக்கு புதிய குடும்ப அட்டை வழங்காவிட்டால் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என கூறி தனது சட்டை பையில் வைத்து இருந்த மாத்திரைகளை எடுத்து காட்டினார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை அதிகாரிகள் சமாதானமாக பேசி முகவரி மாற்றம் உள்பட அனைத்து தவறுகளையும் திருத்தி புதிய அட்டை வழங்குகிறோம் என உறுதி அளித்தனர். அதன்பின்னரே முகமது இப்ராகிம் சமாதானம் அடைந்தார்.
குடும்ப அட்டைக்காக முதியவர் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த நேரத்தில் ஒருவர் மாவட்ட வழங்கல் அதிகாரியிடம் நான் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து 6 மாதங்கள் ஆகியும் இன்னும் வந்து சேரவில்லை எப்போது கிடைக்கும்? என கேட்டார். அதற்கு மாவட்ட வழங்கல் அதிகாரி ராஜேந்திரன் மே 31 ஆம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இது மாதிரி தான் ஒவ்வொரு தாலுக்கா ஆபிசிலும் ஆயிரக்கணக்கான ரேசன் கார்டு விண்ணப்பித்து கிடப்பிலே கிடக்கிறது என்று நிருபர்கள் ஒட்டுமொத்தமாக ராஜேந்திரனிடம் கேட்டனர்.
வரும் 30ம் தேதிக்குள் எல்லா விண்ணப்பங்களும் சரிபார்த்து கொடுக்கப்படும். ஒரு விண்ணப்பம் பெண்டிங் இருந்தா என்னை செருப்பால அடிங்க! என்று ஆவேசத்தில் கத்தினார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.