திருப்பூர் அருகே ரயில் மோதி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு
திருப்பூர்: திருப்பூர் அருகே தண்டவாளத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேர் ரயில் மோதி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் ஒற்றைக்கண் பாலம் பகுதியில், தண்டவாளத்தை ஒட்டி ரயில்வே சிக்னலுக்கான கேபிள் பதிக்கும் பணி கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொங்கு மெயின் ரோடு அருகே நேற்று மதியம் ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் தண்டவாளத்தில் சிக்னல் கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற விரைவு ரயில், தொழிலாளர்கள் மீது மோதியது.ரயில் மோதியதில் ஒப்பந்த தொழிலாளர்களான சின்னசாமி, சடையன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ராமலிங்கம் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். ரயில்வே தண்டவாளத்தில் இருவர் உடல் சிதறி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.