மாயமான விமானத்தை தேடும் பணியில் சிக்கல்.. விமானங்கள், ஹெலிகாப்டர்கள் கடற்படை தளத்திற்கு திரும்பின !
சென்னை: மாயமான ஏஎன்-32 விமானத்தை தேடும் பணிக்கு சென்ற விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தாம்பரம் விமானப் படை தளத்திற்கு திரும்பின.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் இந்திய விமானப்படை தளம் உள்ளது. இங்கிருந்து அந்தமானில் உள்ள போர்ட்பிளேர் நகருக்கு விமானப்படைக்கு சொந்தமான சரக்கு விமானம் மூலம் வாரந்தோறும் பொருட்கள் கொண்டு செல்லப்படும். ராணுவ வீரர்களும் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
அதேபோல், விமானப் படைக்கு சொந்தமான ஏ.என்.-32 ரக சரக்கு விமானம் ஒன்று தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலை 8.30 மணிக்கு அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு கிளம்பிச் சென்றது. ஆனால் நடுவானில் அது வங்கக் கடலுக்கு மேலே செல்லும்போது மாயமாகி விட்டது. அது கடலில் மூழ்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அதில், 12 தமிழர்கள் பயணம் செய்தது தெரிய வந்துள்ளது. 6 விமானிகள், கடலோர காவல்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் 4 பேர் பயணித்துள்ளனர். 11 விமானப்படை அதிகாரிகள், 8 கடற்படை வீரர்களும், மாயமான விமானத்தில் சென்றுள்ளனர்.
இந்நிலையில், மாயமான விமானத்தை தேடும் பணி இரண்டாவது நாளாக முழுவீச்சில் நடந்து வருகிறது. இதனை தேடும் பணியில் விமானப்படையினரும், கப்பல் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து மாயமான விமான படைக்கு சொந்தமான ஏ.என்.-32 ரக சரக்கு விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இரவு நேரம் என்பதால் விமானம் கண்டு பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தாம்பரம் விமானபடை தளத்திற்கு மீண்டும் திரும்பின. செயற்கைகோள் மூலம் மாயமான விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் முடக்கிவிடப் பட்டுள்ளது.