சரியும் டிஆர்பி... சங்கூதப்படும் "டல்" சீரியல்கள்.. படையெடுத்து வரும் டப்பிங் தொடர்கள்.. !
சென்னை: டிஆர்பி ரேட்டிங்கில் அடிவாங்கும் சீரியல்களை தூக்கி கடாசிவிட்டு அந்த நேரத்தில் டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது சன்டிவி. முதலில் பலியானது ஈஎம்ஐ எனப்படும் தவணை முறை வாழ்க்கை, இப்போது தேவதை சீரியல் ஊத்தி மூடப்பட்டு விட்டது.
சன், விஜய் டிவிக்களின் சீரியல் டிஆர்பி ரேட்களை கட்டுப்படுத்தியதில் பாலிமர் டிவிக்கு கணிசமான இடமுண்டு. இந்தி டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பி தனி இடத்தைப் பிடித்தது. குடும்பத் தலைவி தொடங்கி, கல்லூரிப் பெண்கள் வரை அனைத்துத் தரப்பையும் கட்டிப் போட்டன டப்பிங் சீரியல்கள். இதே பாணியில் ரசிகர்களை பிடிக்க பல முன்னணி சேனல்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தற்போதைய டிஆர்பியில் நூற்றுக்கணக்கான சேனல்கள் உள்ளன. இந்த சேனல்கள் பல ஆயிரம் கோடி ரூபாயை விளம்பரம் மூலம் பெறுகிறது. விளம்பரம் அதிகம் வந்தால்தான் நிகழ்ச்சியைத் தரமாக நடத்தமுடியும் என்பது சேனல்களின் கொள்கையாக இருக்கிறது. அதனால் விளம்பரத்தைப் பெற ஒவ்வொரு சேனலும் எவ்வளவு தூரம் ஓட முடியுமோ அந்த அளவுக்கு போட்டி மனப்பான்மையுடன் செயல்படுகின்றன.
டிஆர்பி ரேட்டிங்
தொலைக்காட்சியில் வரும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் டி.ஆர்.பி ரேட்டிங் என்று ஒன்று இருக்கிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு அந்த விளம்பரத்தின் புகழ்தான் டிஆர்பி. இதன் விரிவாக்கம் "இலக்கு அளவீட்டு புள்ளி' (டார்கெட் ரேட்டிங் பாய்ண்ட் அல்லது டெலிவிஷன் ரேட்டிங் பாய்ண்ட்) என்பதாகும். பார்வையாளர்கள் பங்கெடுக்கும் அளவை வைத்து ஒரு குறிப்பிட்ட சேனல், குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு மதிப்பீடுகள் செய்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்டது இந்தப் புள்ளி விவரம்.
மக்களின் வரவேற்பு
இந்த டி.ஆர்.பி முடிவுகள் விளம்பரதார்களை அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சிக்குத் தக்க வைக்க உதவுகிறது. ஒரு நிகழ்ச்சிக்கு அதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் பொருத்து இந்த டி.ஆர்.பி ஏறவோ, இறங்கவோ செய்யும். மக்களில் சிலர் எந்த சேனலை அதிகம் விரும்பிப் பார்க்கிறார்கள் என்று கணக்கெடுக்கும் முறை இது.
கணக்கெடுப்பது எப்படி?
தேர்ந்தெடுக்கப்பட்ட சில வீடுகளில் ஒரு ஜி.ஆர்.பி மீட்டரை (செட்டாப் பாக்ஸ்) பொருத்தி, அந்த வீட்டுக்காரர்கள், எந்த சேனல் எப்பெப்போது எவ்வளவு நேரம் பார்க்கிறார்கள் என்று கணக்கெடுத்து, குத்து மதிப்பாக, "இந்த டி.விதான், 7.30மணிக்கு பாப்புலர்', "இந்த டிவியில்தான் நிகழ்ச்சிகள் அதிகம் பார்க்கப்படுகிறது' அப்படி இப்படி என்று சொல்லும் ஒரு போக்குதான் டி.ஆர்.பி ரேட்டிங்.
ஒரு நிகழ்ச்சிக்கு எந்த அளவுக்கு ரேட்டிங் இருக்குதோ, அதன் அடிப்படையில்தான், விளம்பரதாரர்கள் அந்த நிகழ்ச்சிக்கு எவ்வளவு தொகையை கொடுத்து எந்தெந்த நேரத்தில் விளம்பரம் போடலாம் என்று முடிவு செய்வார்கள்.
இந்த ரேட்டிங் முறையில் பல விஷயம் குழப்பம்தான். எவ்வளவு பேர் வீட்டில் மீட்டர் போடுவார்கள்? ரேட்டிங் முடிவுகள் எல்லாம் நேர்மையான முறையில் தான் நடக்கிறதா?இப்படிப் பல கேள்விகளுக்குப் பதில் இல்லை. சில சானல்கள், மற்ற சானல்களை விட சிறந்தது என்று தாங்களாகவே கூவிக்கூவி நிகழ்ச்சிகளை விற்பார்கள்.
காணமல் போன நடிகர்கள்
டிஆர்பி ரேட்டிங் சரியத்தொடங்கி விட்டால் சீரியலோ நிகழ்ச்சியோ மூடுவிழா நடத்தி விடுவார்கள். சன் டிவியில் தேவதை பகல் 12 மணிக்கு ஒளிப்பரப்பாகி வந்த தேவதை சீரியல் தீடீர் என நின்றுவிட்டது காரணம் எல்லாம் டிஆர்பிதான் என்கின்றனர். தவிர கதாநாயகியில் தொடங்கி பல நடிகர்கள் காணமல் போனதும் முக்கிய காரணமாகிவிட்டது.
ரேட்டிங் இல்லையே
ரேட்டிங் இல்லாது போனது காரணமாகவும் இருக்கலாமா? கதையில் முக்கிய கதாபாத்திரங்கள் கதிர், அவரின் தாய் துர்கா திருந்தி விட்ட போதும், மது தன் தாயை ஏற்று கொண்ட போதும், ஐயப்பன் தந்தை பல எபிசோடுகளுக்கு பிறகு வந்தும் சீரியல் நின்று போன காரணம் என்ன? எதற்கு இந்த மெகா சீரியல் மோகம். ஆரம்பத்தில் கதையே கூடுவிட்டு கூடு பாய்ந்து நகர்ந்தது.
நாகினி டப்பிங்
இப்போதைய நிலமை அதுவும் இல்லை என ஆகிவிட்டது. அந்த நேரத்தில் நாகினி தமிழ் டப்பிங் சீரியல் மறு ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. இரவில் நாகினி ஒளிபரப்பவே தடை கேட்டு புகார் அளித்து வரும் நிலையில் பகலில் நாகினியை ஒளிபரப்புகிறது சன்டிவி. டிஆர்பியை தக்கவைக்க டல் சீரியர்களை தூக்கி கடாசிவிட்டு மேலும் சில டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பு செய்ய தயாராகி வருகிறதாம் சன் டிவி.
தவணை முறை வாழ்க்கை
அழுகாட்சி சீரியல்களுக்கு மத்தியில் ஆர்பாட்டமாக தொடங்கப்பட்டது ஈஎம்ஐ சீரியல். தவணை முறை வாழ்க்கை நடத்தும் தலைமுறையினர் சந்திக்கும் சங்கடங்களையும், ஐ டி நிறுவனத்தில் சவால்களையும் எடுத்துக்கூறிய அந்த சீரியல் பாதியில் நிறுத்தப்பட்டது.
காமெடியா கழுத்தறுப்பா?
இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பான ஈஎம்ஐ நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக காமெடி ஜங்சன் என்று நடிகர் ஸ்ரீமன், நடிகை மதுமிதாவை வைத்து தொடங்கினார்கள். அதுவும் சரிவரவில்லை இப்போது அந்த நடிகர்களுக்குப் பதிலாக தற்போது மதுரை முத்து தலைமையில் சிலர் வந்து பேசிவிட்டு செல்கின்றனர்.
பொன்னூஞ்சல்
சன் டிவியில் பிற்பகல் 1 மணிக்கு பொன்னூஞ்சல் என்ற ஒரு சீரியல் பரபரப்பாக தொடங்கப்பட்டது. அபிதா அப்புறம் ஷமீதா நடித்தனர். இப்போது என்னவானதோ யாரையும் காணோம் யார் யாரோ நடிக்கிறார்கள். விரைவில் இந்த சீரியலும் மூடுவிழாவிற்கு தயாராகி வருகிறது.
ஆயிரம் எபிசோடு சீரியல்கள்
சன்டிவியில் பல சீரியல்கள் ஆயிரம் எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சில சீரியல்கள் மட்டுமே ரசிக்கும்படியாக இருக்கிறது. பல சீரியல்கள் கழுத்தறுப்பாகத்தான் இருப்பதாக கூறி அவற்றை நிறுத்தவேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருவதால் சீரியல்களை நிறுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.