கட்சி, ஆட்சியில் டிடிவி தினகரனை முன்னிலைப்படுத்துங்க - முதல்வரிடம் ஆர்டர் போட்ட ஆதரவு எம்எல்ஏக்கள்
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கட்சிப் பணிகளை தொடங்க தலைமை அலுவலகம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: கட்சியிலும், ஆட்சியிலும் டிடிவி தினகரனை முன்னிலைப்படுத்த வேண்டும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கட்சிப் பணிகளை கட்சி தலைமை அலுவலகத்திலிருந்து தொடங்கப் போகிறாராம். யாரும் இடையூறு செய்யக் கூடாது என்று அவரது ஆதரவாளர்கள் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அதிமுகவின் கோஷ்டிகள் இணைப்புக்காக கட்சியில் இருந்து தான் ஒதுங்குவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். இதனையடுத்து இரட்டை இலை சின்ன லஞ்சப் புகார் வழக்கில் சிறை சென்று வெளிவந்த நிலையில் தான் கட்சியில் நீடிப்பதாக தெரிவித்து பரபரப்பை கிளப்பினார்.
கட்சிப்பணியில் தினகரன்
தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்து சிறையில் இருந்த காலகட்டத்தில் கட்சியில் நடந்த செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப் போவதாக தெரிவித்தார். தனது சித்தி சசிகலா அட்வைஸ்படி 2 மாதம் பொறுத்திருந்து இரண்டு கோஷ்டிகளின் செயல்பாடுகளை பார்க்கப் போவதாகவும். எனினும் கட்சிப் பணியின் தொடர்ந்து ஈடுபடப் போவதாகவும் கூறினார்.
திடீர் பிடிவாதம்
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி கோஷ்டி தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது நீக்கப்பட்டது தான். அவர் அந்த அறிவிப்போடு நின்று கொள்ளட்டும் கட்சியையும் ஆட்சியையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கொக்கரித்தன.
தினகரனுடன் சந்திப்பு
எம்எல்ஏக்கள் ஆதரவு இதனால் எடப்பாடி கோஷ்டி, தினகரன் கோஷ்டிக்கு இடையே கடுமையான வார்த்தைப் போர் நடைபெற்றது. இதனிடையே எடப்பாடி அரசில் உள்ள எம்எல்ஏக்கள் பலர் தினகரனை சந்தித்து தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர். சுமார் 30க்கும் மேற்பட்ட எமஎல்ஏக்கள் தினகரனை சந்தித்து சென்றுள்ளனர்.
சின்னத்துக்கு போட்டி
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நாளையோடு முடிகிறது. சின்னத்திற்கு சொந்தம் கொண்டாடி அதிமுகவின் எடப்பாடி கோஷ்டியும், ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டியும் லட்சக்கணக்கான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளன. இந்த அக்கப்போர்களுக்கு மத்தியில் ஜெ.தீபாவும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
அடுத்த அதிரடி
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செயல்பட்டு கொண்டிருக்கும் அதிமுகவில், அடுத்தகட்டமாக டிடிவி. தினகரன் விரைவில் கட்சி அலுவலகம் சென்று கட்சிப் பணிகளை தொடங்க உள்ளாராம். அந்த சமயத்தில் இடையூறு செய்யக் கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனை மேற்கொண்டதாக தெரிகிறது.
பேசியது என்ன?
டிடிவி தினகரனை முன்னிலைப்படுத்த வேண்டும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற வேண்டும், இப்தார் விருந்து டிடிவி தினகரன் தலைமையில் நடத்த வேண்டும். இதற்கெல்லாம் சம்மதம் தெரிவித்தால் குடியரசுத்தலைவர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி சொல்லும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று கூறினார்களாம். தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தினகரனை ஆதரிக்கும் 34 எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.