ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு கட்சி பதவி கொடுத்து மற்றவர்களுக்கு வலைவீசுகிறாரா டிடிவி தினகரன் ?
ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு தினகரன் கட்சி பதவி கொடுத்திருப்பதும் மற்றவர்களை வளைக்கவா? என சந்தேகம் எழுப்பியுள்ளது எடப்பாடி தரப்பு.
சென்னை: தமது ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு அதிரடியாக கட்சி பதவியை கொடுத்திருப்பதன் மூலம் மற்றவர்களுக்கும் வலைவீசுகிறாரோ டிடிவி தினகரன் என சந்தேகம் எழுப்புகிறது எடப்பாடி தரப்பு.
60 நாட்கள் வனவாசத்துக்கு பின்னர் தீவிர அரசியலுக்கு இன்று மீண்டும் திரும்பியுள்ளார் டிடிவி தினகரன். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக தினகரனையும் அவரது குடும்பத்தினரையும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துவிட்டோம் என அறிவித்து உறுதியாக உள்ளனர்.
டிடிவி தினகரன் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தால் அவரை கைது செய்யும் எடப்பாடி கோஷ்டி தயாராக உள்ளது. இந்த நிலையில் இன்று அதிரடியாக சுற்றுப் பயணம் மற்றும் நிர்வாகிகளை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் தினகரன்.
இதில் தமது ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு கட்சி பதவியை வழங்கியுள்ளார். குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பழனியப்பன், செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம் ஆகியோருக்கு கட்சி பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
தமக்கு 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது என தினகரன் கூறியிருந்தார். தற்போது எம்.எல்.ஏக்களுக்கு கட்சி பதவி கொடுத்திருப்பதன் மூலம் மற்றவர்களுக்கும் தினகரன் வலைவீசுகிறாரோ என்ற சந்தேகத்தை எடப்பாடி தரப்பு எழுப்பியுள்ளது.