எடப்பாடிக்கு எதிராக பெத்த பெத்த பெருமாள்களை களமிறக்கும் தினகரன்! குர்ஷித், தவே ஹைகோர்ட்டில் ஆஜர்?
முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டு தொடரப்பட்ட வழக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால் சீனியர் வக்கீல்களை களமிறக்க டிடிவி தினகரன் திட்டமிட்டுள்ளாராம்.
சென்னை : முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் டிடிவி தினகரன் தங்களது தரப்பிற்காக வாதாட மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித், துஷ்யந்த் தவேவை நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எம்.துரைசாமி முன்னிலையில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அ.தி.மு.க.வில் இருந்து விலகாமலும், வேறு கட்சியில் சேராமலும் இருக்கும் நிலையில் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 18 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுத்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரி மனுவில் கூறப்பட்டு இருந்தது. 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் வக்கீல் பி.ஆர்.ராமன் ஆஜராகி இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து இன்றே விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
நாளை விசாரணை
இதை ஏற்க மறுத்த நீதிபதி இன்று தான் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இதை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றார். மேலும் நாளை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.
பெரும்பான்மை வழக்கு
ஏற்கனவே 21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதே போன்று சபாநாயகர் நோட்டீசை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த இரு வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு விசாரணைக்கு வந்தது.
எதிர்பார்ப்பு
அப்போது செப்டம்பர் 20 வரை முதல்வர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்கப்பட்டது. அரசு பெரும்பான்மையை நிரூபிப்பது குறித்தும், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்தும் நாளை முடிவு கிடைக்கும் என்று அரசியல்வாதிகளும், மக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
திமுக சார்பில் கபில் சிபில்
தமிழக அரசியல் போரின் இறுதிக் கட்டம் நாளை நீதிமன்றத்தில் நடைபெற உள்ளதால் வழக்கு தொடர்ந்தவர்கள் தங்கள் தரப்பில் சீனியர் வக்கீல்களை தேர்வு செய்துள்ளனர். திமுக தரப்பில் கடந்த முறையே மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் அஜராகி வாதாடினார், அவரே நாளையும் இந்த வழக்கில் ஆஜராகிறார்.
சல்மான் குர்ஷித், துஷ்யந்த் தவே
டிடிவி தினகரன் தரப்பில் சீனியர் வழக்கறிஞர்களான சல்மான் குர்ஷித் மற்றும் துஷ்யந்த் தவே ஆகியோர் வாதாட உள்ளதாகத் தெரிகிறது. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கிலும் இவர்கள் ஆஜராகி வாதாட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முகுல் ரோஹத்கி
முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கியை இந்த வழக்கிற்காக ஆஜராக கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
மெஜாரிட்டியை நிரூபிக்கும் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம் நாளை பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையிலேயே ஆளுநரின் அடுத்த கட்ட நடவடிக்கை அமையும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான தடையை நீக்கி உத்தரவிடப்பட்டால் அடுத்த கனமே ஆளுநர் முதல்வர் பழனிசாமிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவார் என்று சொல்லப்படுகிறது.
தடை வந்தால்?
அதன்படி முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க சட்டசபையை கூட்டினாலும், தற்போதைய சூழிலில் அவருக்கு மெஜாரிட்டி உள்ளது. இதனால் ஆட்சிக்கு பங்கம் இல்லை, என்றாலும் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு ஹைகோர்ட் தடை விதித்தால் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிடுவாரா என்ற அடுத்த அரசியல் ஆட்டம் தொடங்கும்.