ஜெ.வால் விரட்டப்பட்ட தேமுதிகவை சப்போர்ட்டுக்கு கூப்பிடும் டிடிவி.தினகரன்
ஜெயலலிதாவால் கூட்டணியில் இருந்து விரட்டப்பட்ட விஜயகாந்தை ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்குமாறு டிடிவி.தினகரன் கேட்டுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவால் 2011 பொதுச்தேர்தலுக்குப்பின் கூட்டணியில் இருந்து விரட்டப்பட்டவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவரை தற்போது நடைபெறவுள்ள ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்குமாறு டிடிவி.தினகரன் கேட்டுள்ளார்.
ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஓபிஎஸ் தரப்பு அதிமுக, சசிகலா தரப்பு அதிமுக, திமுக, தேமுதிக, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
சசிகலா தரப்பு அதிமுகவுக்கு பெரும் சவாலாக உள்ள இந்தத் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி.தினகரன் வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து பேசிய அவர், இடைத்தேர்தலில் மதிமுக, பாஜக, தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி உள்ளிட்டக் கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தேமுதிகவுன் ஜெ.கூட்டணி
டிடிவி தினகரன் இடைத்தேர்தலில் ஆதரவு கோரும் தேதிமுக 2011ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததது. அந்தத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆளும் கட்சியாக பதவியேற்றது. அதைத்தொடர்ந்து இரண்டாம் இடம் பிடித்த தேமுதிக பிரதான எதிர்க்கட்சியாக சட்டசபைக்கு சென்றது.
நாக்கை துருத்தி பல்லைக்கடித்து
இதைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதிமுக உறுப்பினர்களும் தேமுதிக உறுப்பினர்களும் சட்டசபையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது சினிமா அல்ல என அதிமுக உறுப்பினர்கள் விஜயகாந்தை பார்த்து சொல்லவும், கடும் கோபமடைந்த விஜயகாந்த் அவர்களை பார்த்து வேட்டியை மடித்துக்கட்டி நாக்கை துருத்தி பல்லைக்கடித்ததெல்லாம் தனிக்கதை.
தேமுதிகவினர் சஸ்பென்ட்
இதைத்தொடர்ந்து தேமுதிக உறுப்பினர்களை சஸ்பென்ட் செய்வதையும் வெளியேற்றுவதைய்ம ஆளும் அதிமுக வாடிக்கையாக கொண்டிருந்தது. அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் தேமுதிகவால் பெற்றி பெற முடிந்தது என்றும் தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுக வெற்றி பெற்றது என்றும் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டனர்.
விஜயகாந்த்துக்கு சவால்விட்ட ஜெ.
ஒரு கட்டத்தில் தேமுதிகவுக்கு திராணி இருந்தால் சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுக்காட்டுங்கள் என ஜெயலலிதா விஜயகாந்துக்கு சட்டசபையில் நேரடியாக சவால் விட்டார். இதைத்தொடர்ந்து விஜயகாந்த் மீது ஜெயலலிதா சார்பில் ஏராளமான அவதூறு வழக்குகளும் பதியப்பட்டன.
இன்றுவரை கீரியும் பாம்புமாக
தேமுதிக உறுப்பினர்கள் பலர் அதிமுகவால் வளைக்கப்பட்டனர்.
இன்று வரை இரண்டு கட்சிகளும் கீரியும் பாம்புமாக உள்ளன. இந்நிலையில் ஜெ. மறைவுக்குப் பிறகு கட்சியை கைப்பற்றிய சசிகலா குடும்பத்தினர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவர்களின் குடும்பத்தை சேர்ந்த தினகரனை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர்.
விஜயகாந்திடம் ஆதரவு கேட்கும் தினகரன்
இரட்டை இலைச் சின்னத்தில்தான் போட்டியிடுவேன், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என பேசிய தினகரன், ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட விஜயகாந்தை இடைத்தேர்தலில் ஆதரவு கொடுக்கும்படி கேட்டுள்ளார். ஏற்கனவே ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களுக்குகெல்லாம் தங்களின் மறைமுக ஆட்சி மூலம் ஒப்புதல் தெரிவித்து வரும் சசிகலா குடும்பம் தற்போது ஜெயலலிதா எதிர்த்தவர்களையெல்லாம் கூட்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.