பூசாரி மாதிரி விபூதி எல்லாம் பூசக்கூடாது... சாமிக்கே உத்தரவு போட்ட டிடிவி தினகரன்
நெற்றியில் விபூதி பூசக்கூட எடப்பாடி பழனிச்சாமிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறதாம். அந்த தடையைப் போட்டது டிடிவி தினகரன்தான் என்கின்றனர்.
சென்னை: நெற்றியில் பளிச் சென்று விபூதி பூசி, குங்குமம் வைத்து பளிச்சென்று இருப்பது எடப்பாடி பழனிச்சாமி ஸ்டைல். முதல்வராக பதவியேற்ற பின்னர் தினசரியும் விபூதி பூசாமல் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார். இப்போது சமீபகாலங்களில் அவரது நெற்றியில் விபூதி மிஸ் ஆகியுள்ளது. இதற்கு காரணம் டிடிவி தினகரன்தானாம்.
ஜெயலலிதா உடல்நலமின்றி இருந்த போதே தற்காலிக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. இதற்காக பழனிச்சாமியின் குலதெய்வ கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தார்களாம்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு ஓபிஎஸ் பதவியேற்றார். 60 நாட்களில் பதவி விலகினார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்லவே எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார்.
குலதெய்வ கோவில் விபூதி
சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம்தான் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊர். சிலுவம்பாளையம் அருகே உள்ள நெடுங்குளம் என்ற ஊரில்தான் பழனிசாமியின் குலதெய்வம் கோயில் இருக்கிறது. இந்த கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட விபூதியும் குங்குமத்தை தினசரி பூசி வந்தார்.
வீட்டிலிருந்து கிளம்பினாலே அந்த விபூதி இல்லாமல் வெளியே வந்தது இல்லை. சமீப காலமாக அவரது நெற்றியில் விபூதி காணப்படவில்லை. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று பலரும் யோசித்தனர்.
விபூதி மகிமை
எடப்பாடி பழனிச்சாமியை பிடிக்காத சிலர், அவரது விபூதி பற்றி தினகரனிடம் போட்டுக்கொடுத்திருக்கிறார்களாம். முதல்வராக நீடிக்க வேண்டும் என குலதெய்வம் கோயிலில் பூஜை செய்து கொண்டுவரப்பட்ட விபூதியைத்தான் தினமும் பூசுகிறார் என்றும் தினசரி சிறப்பு பூஜை செய்கிறார் என்றும் தினகரன் காதில் ஒதியிருக்கின்றனர். இதில் கடுப்பான தினகரன், முதல்வரைக் கண்டித்ததாக கூறப்படுகிறது.
சாமிக்கே உத்தரவா?
பூசாமி மாதிரி எதுக்கு விபூதி வைக்கிறீர்கள் இனி இதெல்லாம் வைக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறினாராம் டிடிவி தினகரன். இதையடுத்தே அவர் சமீபகாலங்களில் அரசு விழாக்களில் விபூதியில்லாமல் பங்கேற்கிறாராம். சாமிக்கே விபூதி வைக்க தடை போட்டதுதான் இப்போது அதிமுக எம்எல்ஏக்கள் மத்தியில் பேச்சாக உள்ளது.
எதுக்கெல்லாம் கட்டுப்பாடு?
சட்டசபையில் முதல்வரும் எதிர்கட்சித்தலைவரும் பேசவும் சிரிக்கவும் கூடாது என்று கூறினார் சசிகலா. அவரது அக்காள் மகன் டிடிவி தினகரனே இப்போது முதல்வர் விபூதி பூசக்கூடாது என்று கூறியுள்ளாராம். முதல்வர் நாற்காலியை தக்கவைக்க இன்னும் என்னென்ன தியாகங்கள் செய்யணுமோ?