தேய்பிறை அஷ்டமியில் வடுகபைரவருக்கு சத்ருசம்ஹார பூஜை செய்த டிடிவி தினகரன்
கட்சியையும், ஆட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர டிடிவி தினகரன் பிரான்மலையில் உள்ள வடுகபைரவருக்கு சத்ரு சம்ஹாரபூஜை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தேய்பிறை அஷ்டமி நாளில் பிரான்மலையில் உள்ள வடுகபைரவருக்கு சத்ருசம்ஹாரபூஜையை செய்துள்ளார் டிடிவி தினகரன். இதன்மூலம் எதிரிகளின் தொல்லைகள் இல்லாமல் போகும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
டிடிவி தினகரன் கடந்த 14ஆம் தேதி மேலூரில் பொதுக்கூட்டம் நடத்தினார். உடனே சென்னை திரும்பவில்லை. ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த தினகரன், நேராக சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலை கோவிலுக்கு சென்றார்.
அங்குள்ள தேனம்மை உடனுறை மங்கைபாகர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற தினகரன் அங்குள்ள வடுகபைரவருக்கு சத்ருசம்ஹார யாகம் செய்தார். தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு யாகம் செய்தால் எதிரிகள் தொல்லை ஒழியுமாம்.
கோவில் கோவிலாக யாகம்
அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளராக சசிகலாவினால் நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன், தற்போது கட்சியில் இருந்து ஓரம்கட்டப்பட்டுள்ளார். கட்சியை மீண்டும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக கோவில் கோவிலாக இறங்கி வருகிறார்.
மூக்குப்பொடி சித்தர்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஓரக்கண்டியம்மன் கோவிலுக்கு போய் பூஜை செய்து யாகம் நடத்தினார். கடந்த வாரம் திருவண்ணாமலைக்கு சென்று மூக்குப்பொடி சித்தரை தரிசித்து ஆசி பெற்றார்.
எதிரிகள் தொல்லை நீங்கும்
கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் எதிரிகள் தொல்லை நீங்கவும் இப்போது தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு யாகம் நடத்தியுள்ளார் டிடிவி தினகரன்.
தஞ்சையில் சிறப்பு பூஜை
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரபல கோவில்களில் டிடிவி தினகரன் சிறப்பு பூஜைகளை செய்ய ஏற்பாடு செய்துள்ளார். தேனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு முன்பாகவே கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவார் தினகரன் என்று அவரது ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர்.