இரட்டை மின்விளக்கு சின்னம்... தேர்தல் ஆணையத்திடம் டிடிவி தினகரன் புகார்
மின் விளக்கு சின்னத்தை இரட்டை மின்விளக்கு சின்னம் என்று கூறி ஓபிஎஸ் அணியினர் பிரச்சாரம் செய்வதாக தேர்தல் ஆணையத்திடம் டிடிவி தினகரன் புகார் அளித்துள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலையை கோட்டை விட்ட டிடிவி தினகரன், ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு அளித்துள்ள இரட்டை மின் விளக்கு சின்னம் பற்றி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். வாக்காளர்களை கவர பொய்யான முறையில் இரட்டை மின்விளக்கு என்று கூறி பிரச்சாரம் செய்வதாகவும் இதனை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அதிமுக சார்பில் இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. இருவரும் வாக்காளர்களை கவர தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்.கே. நகரில் நேற்று பேசிய ஓ.பன்னீர் செல்வம், எங்களது தேர்தல் சின்னம், மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்துவிட்டது. தேர்தல் ஆணையம் வழங்கி இருக்கும் இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்தில், ஒரு விளக்கு எம்ஜிஆர் மற்றொரு விளக்கு ஜெயலலிதா என அவர் தெரிவித்தார். இதனால் டிடிவி தினகரன் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.
இடைத்தேர்தல் களம்
இடைத்தேர்தல் களத்தில் 7 முக்கிய வேட்பாளர்கள் உள்ளனர். சுயேட்சைகளுடன் சேர்த்து 62 பேர் களத்தில் உள்ளனர். சுயேட்சைகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணி இன்று முடிவடையும். இந்த நிலையில் இரட்டை இலை முடக்கப்பட்டதால் அதிமுகவின் இரு அணிகளும் தங்களுக்கு தேவையான சின்னத்தையும், கட்சியையும் பட்டியலிட்டு தேர்தல் ஆணையத்திடம் அளித்தனர்.
கட்சி, சின்னம்
பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி, இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்திலும், சசிகலா அணி சார்பில் அதிமுக அம்மா அணி என்ற பெயரில் தொப்பி சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
தொப்பியுடன் டிடிவி தினகரன்
சின்னத்தை பிரபலப்படுத்த டிடிவி தினகரன் தொப்பியுடன் களமிறங்கியுள்ளார். அதே நேரத்தில் ஓபிஎஸ் அணியோ இரட்டை விளக்கு மின்கம்பம் என்று கூறி வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர். இதனால் கதி கலங்கி போயுள்ள டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். ஓபிஎஸ் அணியினர் இரட்டை என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்றும் மின்கம்பம் என்று மட்டுமே பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொய் பிரச்சாரம்
இரட்டை மின்விளக்கு என்பது பொய் பிரச்சாரம். சமூக வலைத்தளங்கள் வாயிலாக பொய்பிரச்சாரம் செய்வதை ஓபிஎஸ் அணியினர் நிறுத்த வேண்டும் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஏற்கனவே தோல்வி பயத்தில் உள்ள டிடிவி தினகரன் சின்னம் பற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் கூறியுள்ளதாக ஓபிஎஸ் அணியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.