தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம்: சென்னையில் டெல்லி போலீஸ்... எந்த நேரத்திலும் தினகரன் கைது?
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிறது டெல்லி போலீஸ்.
சென்னை: இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கின்றன டெல்லி போலீஸ் வட்டாரங்கள்.
சசிகலாவைத் தொடர்ந்து அதிமுகவை கபளீகரம் செய்த தினகரன் முதல்வர் பதவிக்கும் குறிவைத்தார். ஆனால் மத்திய பாஜக அரசு இதை விரும்பவில்லை.
அனைத்து அஸ்திரங்களும்...
சசிகலா, தினகரன் இல்லாத அதிமுகவையே மத்திய பாஜக அரசு விரும்புகிறது. இதனால்தான் தினகரனை விரட்டியடிப்பதற்கான அனைத்து அஸ்திரங்களும் ஏவப்பட்டு வருகின்றன.
கோஷ்டிகள் இணைப்பு
இதனைத் தொடர்ந்தே ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் பேச்சுவார்த்தைக்கு குழுக்கள் அமைத்தன. இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும் வேறுவழியில்லாத நிலையில் இருக்கிறார் தினகரன்.
சென்னையில் டெல்லி போலீஸ்
அதுவும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் தினகரனால் எதுவும் செய்ய முடியாத நிலை உருவாகிவிட்டது. இந்த நிலையில் தினகரனை விசாரணைக்கு அழைத்துச் செல்ல சம்மனுடன் டெல்லி போலீஸ் சென்னையில் முகாமிட்டுள்ளது.
எந்த நிமிடத்திலும் கைது
விசாரணைக்கு டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கேயே தினகரனை கைது செய்து திகார் சிறையில் அடைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரனால் அவ்வளவு எளிதாக தப்பிவிட முடியாது என்கிறது டெல்லி போலீஸ்.