திடீரென தலித் அரசியலை கையில் எடுக்கும் தினகரன்! எப்படி எதிர்கொள்ளப்போகிறது ஆளும் தரப்பு?
சென்னை: திடீரென தலித் அரசியலை டிடிவி தினகரன் தரப்பு கையிலெடுத்துள்ளது எடப்பாடி தரப்புக்கு நெருக்கடியை அதிகரிக்குமா அல்லது சமாளித்து மீள்வார்களா என்பதே இப்போது தமிழக அரசியலின் பரபரப்பு கேள்வியாக உள்ளது.
தினகரனுக்கு தற்போது 19 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதுதான் தெளிவாகியுள்ளது. என்னதான் ஸ்லீப்பர் செல்கள் எடப்பாடி பக்கம் இருப்பதாக தினகரன் கூறி வந்தாலும், அதிகாரம் இல்லாத தரப்பை விட்டு எதிர் தரப்புக்கு போக யாருக்குத்தான் மனது வரும்?
எனவே இப்போது எம்எல்ஏக்கள் ஆதரவை அதிகரிக்க தலித் என்ற வார்த்தையை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் தினகரன் தரப்பு.
தொடர்பில்லாமல் பேசிய புகழேந்தி
நேற்று தினகரன் தரப்பை சேர்ந்த கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி அளித்த பேட்டியின்போது, தொடர்பே இல்லாமல் தலித் கார்டை பயன்படுத்தி அச்சாரம் போட்டார். பன்னீர்செல்வம் கட்சிக்கு துரோகம் செய்து போனவர் என்றும் அவரை மீண்டும் கட்சியில் சேர்த்தது தப்பு என்றும் கூறிய புகழேந்தி அதன்பிறகு கூறிய கருத்துதான் முக்கியமானது.
புகழேந்தி பேச்சு
தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 30 எம்எல்ஏக்களுக்கு என்னதான் மதிப்பு? இந்த ஆட்சியை காப்பாற்ற வாக்களித்த அவர்களுக்கு மதிப்பு வேண்டாமா என்றெல்லாம் கருத்து தெரிவித்தார் புகழேந்தி. எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்காகவும் பேசாமல் தலித் எம்எல்ஏக்களை மட்டுமே குறிப்பிட்டு புகழேந்தி பேசியது ஏன் என்று பேட்டியெடுத்த பத்திரிகையாளர்களுக்குள் கேள்வி எழுந்தது.
திவாகரன் திடீர் பேட்டி
இதன்பிறகுதான் அதன் தொடர்ச்சியாக தஞ்சையில் ஒரு பேட்டி எதிரொலித்தது. திவாகரன் அளித்த பேட்டியில், முதல்வர் வேட்பாளராக சபாநாயகர் தனபாலை தங்கள் அணி முன்னிறுத்தும் என்று தெரிவித்தார். இவர் ஏன் தனபாலை முன்னிலைப்படுத்தினார் என்பது முக்கியமானது.
தலித் சமூகத் தலைவர்
சபாநாயகர் தனபால் தலித் சமூகத்தை சேர்ந்தவராகும். கடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நேரத்தில் திமுக எம்எல்ஏக்கள் இவரது இருக்கையில் அமர்ந்து தர்ணா நடத்தியது குறித்து அவையில் பேசிய தனபால், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்தான் திமுகவினர் எனக்கு இப்படி ஒரு அவமரியாதை செய்தனர் என்று குறிப்பிட்டார்.
Recommended Video
தனபால்
ஒருபக்கம் தனபாலை முன்னிறுத்த மறுபக்கம் தலித் எம்எல்ஏக்கள் பெயரை குறிப்பிட காரணம், அதிமுகவிற்குள் தலித் எம்எல்ஏக்களை தனித்து ஈர்க்கத்தான் என்று கூறப்படுகிறது. கவுண்டர் ஜாதியை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும், முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும் உள்ளனர். எனவே அடுத்து பெரும்பான்மையாக உள்ள தலித் சமூகத்தை ஈர்த்து கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்த தினகரன் தரப்பு திட்டமிடுவதாக கூறப்படுகிறது. இதுவரை தலித்துகள் மீது அக்கறை எதையும் காட்டாத தினகரன் தரப்பு தங்கள் ஆதாயத்ததிற்காக தலித் நலன் என்ற போர்வையை கையில் எடுத்துள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.