ஜெ. மாதிரி கட்சியை நடத்த தினகரனை விட்டால் ஆளே கிடையாது... வெற்றிவேல் எம்.எல்.ஏ. அதிரடி
ஜெயலலிதா மாதிரி கட்சியை வழிநடத்த தினகரனை விட்டால் வேறு ஆளே கிடையாது என்று அ.தி.மு.க. எம்.ஏ. வெற்றிவேல் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் இல்லாமல் கட்சியை வழி நடத்தி செல்ல முடியாது என்றும், ஜெயலலிதா மாதிரி கட்சியைக் கட்டுக்கோப்பாக வழிநடத்திச் செல்ல தினகரனால் மட்டும்தான் முடியும் என்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ வெற்றிவேல் கூறியுள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரும் பெரம்பூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான வெற்றிவேல், அதிமுகவின் எதிர்காலம் தினகரன்தான் என்று ஓபிஎஸ் அணிக்கு வெளிப்படையாகவே பதில் கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், பிளவுபட்ட இரு அணிகளும் இணைய வேண்டும் என்கிற எண்ணத்தில் தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர். ஆனால் இணைப்பு எதுவும் நடக்கவில்லை.
இதன் பிறகும் தினகரனை கட்சியில் இருந்து விலகி இருக்க சொல்வது தவறான முடிவாகும். நீண்ட நாட்கள் இப்படி அவரை ஒதுக்கி வைக்க முடியாது. அது கஷ்டமான காரியமாகும். கட்சிக்கு ஒரு முகம் வேண்டும்.
கட்சியினரின் வீடுகளில் நல்லது, கெட்டது என்றால் நேரில் சென்று விசாரிப்பதற்கு தகுதியான ஒரு நபர் வேண்டும். சசிகலா இல்லாத நிலையில் தினகரனால் மட்டுமே அது சாத்தியமாகும்.
ஆளில்லை என்பதால் எல்லோருக்கும் பயமில்லை
தற்போது கட்சியை கட்டுக்கோப்புடன் வழிநடத்தி செல்வதற்கு ஆள் இல்லாத காரணத்தால் கட்சியினருக்கு பயம் இல்லாமல் போய் விட்டது. ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதனை கட்டுப்படுத்தவும் ஒருவர் வேண்டும். அதற்கும் தினகரனை விட்டால் ஆள் கிடையாது.
கட்டுக் கோப்புக்கு தினகரன்
தற்போது உள்ள சூழலில் பிளவுபட்டிருக்கும் அ.தி.மு.க.வை ஒருங்கிணைத்து கட்டுக்கோப்பான இயக்கமாக கொண்டு செல்லக்கூடிய தகுதிபடைத்தவர் தினகரன்தான். அவரைவிட்டால் வேறு ஆளே இல்லை.
வெளியே போனவங்க மன்னிப்புக் கேட்கிறார்கள்
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பலர் மன்னிப்பு கடிதம் கொடுத்து கட்சியில் சேருவதற்காக காத்திருக்கிறார்கள். அவர்களை சேர்ப்பது பற்றி முடிவெடுப்பது யார் என்ற குழப்பமும் நிலவி வருகிறது.
திமுகவுக்கு யாரும் போகவில்லை
கட்சி பிளவுபட்டுள்ள நிலையிலும் யாரும் மாற்றுக் கட்சிகளுக்கு செல்லவில்லை. அதுவே அ.தி.மு.க.வின் பலம். இதனை ஒருங்கிணைத்து கொண்டு செல்ல வேண்டிய திறமையும் தினகரனுக்கு மட்டுமே உள்ளது.
டிடிவி மீண்டும் வருவார்
இந்த நிலை மாறும். தினகரன் மீண்டும் கட்சி பணிகளில் ஈடுபடுவார். நிர்வாகிகளுடனான அவரது ஆலோசனை கூட்டம் தற்காலிகமாகவே ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் அந்த கூட்டம் வேறு ஒரு தேதியில் நடைபெறும்.