தேர்தல் ஆணையத்துக்கு புரோக்கர் மூலம் லஞ்சம்... முன்ஜாமீன் கோருவாரா தினகரன்?
இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரன் டெல்லியைச் சேர்ந்த சுகேஷ் சந்திரா என்பவருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதால் அவர் முன்ஜாமீன் கோருவாரா என்ற எதிர்பார்ப்பு...
சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயற்சித்த வழக்கில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸாரின் கைது நடவடிக்கையை தவிர்க்க டிடிவி தினகரன் முன்ஜாமீன் தாக்கல் செய்யலாம் என்று தெரிகிறது.
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மற்றும் சசிகலா நியமனம் தொடர்பாக டெல்லியில் சசிகலா, ஓபிஎஸ் அணியிடம் இந்திய தேர்தல் ஆணையம் இன்று மீண்டும் விசாரணை நடத்துகிறது.
இதில் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக டெல்லியைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திராவிடம் தினகரன் ரூ. 1.03 கோடியை லஞ்சமாக கொடுத்துள்ளார்.
புரோக்கர் சுகேஷ் சந்திரா கைது
இதுகுறித்து தகவலறிந்த டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திராவிடம் இருந்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
ரகசிய இடத்தில் விசாரணை
அவரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக டிடிவி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அவருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
ரூ. 60 கோடி வரை பேரம்
இரட்டை இலைச்சின்னத்தை பெற சுகேஷ் சந்திராவிடம், டிடிவி தினகரன் ரூ. 60 கோடி ரூபாய் வரை பேரம் பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் டெல்லி போலீஸார் தமிழகத்துக்கு வந்து டிடிவி தினகரனை கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.
முன்ஜாமீன்
இந்நிலையில் கைது நடவடிக்கையில் தப்பிப்பதற்காக முன்ஜாமீன் பெற டிடிவி தினகரன் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிகிறது. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததாக தினகரன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரிலேயே அத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.