வலுக்கும் கலகக் குரல்... பெங்களூர் சிறையில் நாளை சசிகலாவை சந்திக்கிறார் தினகரன்?
தங்களது குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராக அதிமுகவில் உச்சகட்ட எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் நாளை பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்கிறார் தினகரன்.
சென்னை: அதிமுக (அம்மா) கட்சியில் தமக்கு எதிராக கலகக் குரல் வலுத்து வரும் நிலையில் பெங்களூரு சிறையில் சசிகலாவை நாளை டிடிவி தினகரன் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக (அம்மா) கட்சியின் துணைப் பொதுச்செயலர் தினகரன் தம்மை நிழல் முதல்வராக நினைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார். டெல்லி நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்யக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்து வருகிறார்.
மிரட்டும் தினகரன்
இதனால் ஒட்டுமொத்தமாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தம்பிதுரை உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தினகரனிடம் எடுத்துச் சொல்லியும் அவர், நான் நினைத்தால் ஆட்சியைக் கவிழ்ப்பேன்.. நான் நினைத்தால்தான் நீங்கள் எல்லாம் அமைச்சர்கள் என்ற ரேஞ்சில் பேசி வருகிறார்.
இணையும் கைகள்
இதை சகிக்க முடியாமல் ஓபிஎஸ் அணியுடன் கைகோர்க்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி முடிவு செய்துள்ளது. இதற்காக இருதரப்பும் தற்போது ஐவர் அணியை அமைத்து பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வருகிறது.
சசியுடன் நாளை சந்திப்பு
அதிமுகவில் சசிகலா, தினகரன் ஆகியோரை ஓரம்கட்டும் கலகக் குரல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நாளை தாம் சந்திக்க உள்ளதாக தமது ஆதரவு அமைச்சர்களிடம் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
டெல்லியில் விசாரணை
டெல்லியில் இரட்டை இலை சின்னம் மற்றும் சசிகலாவின் நியமனம் தொடர்பான விசாரணையை தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது. இந்த நிலையில்தான் சசிகலாவை நேரில் சந்தித்து பேச உள்ளதாக தினகரன் கூறியுள்ளார்.
அதிருப்தியில் சசிகலா
ஆர்கே நகரில் போட்டியிட வேண்டாம் என தாம் கூறியதை நிராகரித்து தினகரன் போட்டியிட்டதாலேயே இந்த நெருக்கடி என்கிறாராம் சசிகலா. இதற்காக சிறையில் இருந்தபடியே தினகரனுக்கு டோஸும் விட்டிருந்தார் சசிகலா. தற்போது தினகரன் நேரில் சென்று சசிகலாவை சந்திக்க இருப்பது அதிமுகவின் இரு அணிகளிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.