கெடு முடியப் போகிறது.. ஆதரவாளர்களுடன் இடைவிடாத ஆலோசனையில் தினகரன்!
வரும் 5-ஆம் தேதி அதிமுகவின் கட்சி அலுவலகத்துக்கு டிடிவி தினகரன் செல்லவுள்ள நிலையில் அவரை அவரது ஆதரவாளர்கள் இன்று திடீரென சந்தித்து பேசினர்.
சென்னை: டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் ஆதரவாளர்கள் சந்தித்து பேசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்ட தினகரன் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். அதிரடி அரசியலை காட்டாமல் இருந்த அவர் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி முதல் தனது அரசியல் பணிகள் வேகமெடுக்கும் என்று தஞ்சாவூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு திட்டங்களை வகுப்பது குறித்து ஆலோசனை நடத்த வரும் 5-ஆம் தேதி நிர்வாகிகள் அனைவரும் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருமாறு டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அதிமுகவில் இருந்தே ஒதுக்கி வைப்பதாக தங்களால் அறிவிக்கப்பட்ட பிறகும், தினகரன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது அமைச்சர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தடுக்கும் திட்டத்தில் அதி்முக அம்மா
அவர் அதிமுகவின் தலைமை அலுவலகத்துக்கு வந்துவிடக் கூடாது என அமைச்சர்கள் விரும்புகின்றனர். அதனால் தலைமை செயலகத்தில் அமைச்சர் சிவி சண்முகத்தின் அறையில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் கடந்த திங்கள்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டனர்.
யாருக்கும் உரிமை கிடையாது
அதன்பின்னர் செவ்வாய்க்கிழமை முதல்வர் தலைமையிலும் ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் நேற்று சசிகலாவை பெங்களூர் சிறையில் சந்தித்த தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், என்னை கட்சி அலுவலகத்துக்கு செல்லக் கூடாது என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை என்றார்.
இன்று ஆலோசனை
இதனிடையே அதிமுக கட்சி அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் டிடிவி தினகரனை அவரது பெசன்ட் நகர் வீட்டில் எம்எல்ஏக்கள் பழனியப்பன், வெற்றிவேல், செந்தில்பாலாஜி ஆகியோரும் தமிழக டெல்லி பிரதிநிதி தளவாள் சுந்தரமும் சந்தித்தனர்.
சமாளிப்பது தொடர்பாக ஆலோசனை
வரும் 5-ஆம் தேதி கட்சி அலுவலகத்துக்கு செல்லும் தினகரனை எடப்பாடி அணியினர் தடுக்கும் போது எந்த மாதிரியான செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று தெரிகிறது.