டிடிவி தினகரன் அடக்கிப் பேசாவிட்டால் நாங்கள் அடக்க வேண்டியிருக்கும் - கேபி.முனுசாமி எச்சரிக்கை
டிடிவி தினகரன் அடக்கிப் பேசாவிட்டால் நாங்கள் அடக்க வேண்டியிருக்கும் என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் அடக்கிப் பேசாவிட்டால் நாங்கள் அடக்க வேண்டியிருக்கும் என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் ஜெயலலிதா மறைந்த பின்பு தனது சித்தியை பொதுச்செயலாளர் என ஏமாற்றி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சசிகலாவின் அதிகார ஆசையால் அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என பிரிந்துள்ளது. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கே மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுகவினரும் கட்சிப் பிளவு பட்டதில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியில் ஊரைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
தினகரன் நிறுத்திக்கொள்ள வேண்டும்
இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கேபி.முனுசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது டிடிவி தினகரன் ஜெயலலிதாவை சந்தித்ததாக பொய் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இயக்கத்துக்காக சிறைக்கு சென்றிருக்கிறாரா?
தொடர்ந்து அவர் பேசியதாவது, இந்த இயக்கத்துக்காக டி.டி.வி.தினகரன் ஏதாவது ஒரு தியாகம் செய்து இருக்கிறாரா? இந்த இயக்கத்துக்காக போராடி சிறைச்சென்று இருக்கிறாரா?. சிறை சென்று இருக்கிறார். ஆனால் செய்த குற்றத்துக்காக சிறைக்கு சென்றார்.
பல் விஷயங்களை சொல்ல வேண்டிவரும்
அவருக்கு நாங்கள் அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுக்கிறோம். தயவுசெய்து உண்மைக்கு மாறான கருத்துகளை சொல்வீர்கள் என்று சொன்னால், உங்களை பற்றி பல்வேறு கருத்துகளை சொல்ல வேண்டியது வரும்.
உங்களுக்கும், கட்சிக்கும் சம்பந்தம் இல்லை
உங்களுக்கும், கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஜெயலலிதா மறைந்த பின்பு உங்கள் சித்தியை வைத்துக்கொண்டு துணை பொதுச்செயலாளர் என்று ஏமாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள்.
நாங்கள் உங்களை அடக்கிவிடுவோம்
டிடிவி.தினகரன் அடக்கிப்பேச கொஞ்சம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி அடக்கிப்பேசவில்லை என்று சொன்னால் நாங்கள் உங்களை அடக்கிவிடுவோம். இது ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் உண்மையாக உழைக்கின்ற, தர்மத்தின் படி நடக்கின்ற தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம் பின்னால் நின்று கொண்டு இருக்கிறார்கள். முழுமையான ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வம் பின்னால் இருக்கிறார்கள்.
அதர்மம் அங்கே இருக்கிறது
தர்மம் இங்கு இருக்கிறது. சந்தர்ப்பவாதம், அதர்மம் அங்கே இருக்கிறது. தர்மத்துக்கு சோதனை வரலாம். ஆனால் இறுதி வெற்றி தர்மத்தை வழிநடத்துகின்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு தான் கிடைக்கும்.
மாணவர் உயிரிழப்பு - விசாரணை வேண்டும்
தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி பாராளுமன்ற மாநிலங்களவை தலைவர் டாக்டர் மைத்ரேயன் பதில் கொடுத்து இருக்கிறார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்த தமிழக மாணவர் உயிரிழந்தது தொடர்பாக ஒரு விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் சார்பில் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றும் முனுசாமி கூறியுள்ளார்.