அந்நிய செலாவணி மோசடி வழக்கு.. 16ம் தேதி தினகரன் ஆஜராக ஹைகோர்ட் உத்தரவு
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் வரும் 16ம் தேதி டிடிவி தினகரன் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் வரும் 16ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1996ம் ஆண்டு வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றது தொடர்பாக டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இது தொடர்பான வழக்குகள் கடந்த 20 ஆண்டுகளாக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இடைக்காலத் தடை
இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதங்களைக் கேட்காமல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதாகக் குற்றம்சாட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவிற்கு இடைக்காலத் தடை விதித்தது.
குற்றச்சாட்டு
மேலும், டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர், குற்றச்சாட்டுகளை எழும்பூர் நீதிமன்றத்தில் பதிவு செய்யும் போது அமலாக்கத்துறையின் வாதம் மட்டுமே கேட்கப்படுவதாக குற்றம் சாட்டினார். தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் பொய்யான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஹைகோர்ட் கெடு
இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 19ம் தேதி வரை பதிவான குற்றச்சாட்டுகளை ரத்து விட்டு, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் முன்னிலையில் ஜூலை 31ம் தேதி புதிய குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் தினமும் விசாரணை நடத்தி 3 மாதத்தில் வழக்கு விசாரணையை முடித்து வைக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தினகரன் ஆஜராக உத்தரவு
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் 16ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வரும் 21ம் தேதி முதல் 31ம் தேதிக்குள் அரசு தரப்பு சாட்சியங்களைக் குறுக்கு விசாரணை செய்து முடிக்கவும் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.