60 நாள் கெடு முடிந்தது- ஆக.6 முதல் ஆட்டத்தை ஆரம்பிக்கப் போகும் டிடிவி தினகரன்
அணிகள் இணைப்புக்கு கொடுத்த 60 நாட்கள் கெடு முடிந்து விட்டதால் ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு பின்னர் தினகரன் தனது ஆட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்க டிடிவி தினகரன் கொடுத்த கெடு ஆகஸ்ட் 5ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு பின்னர் தினகரன் ஆட்டத்தை ஆரம்பிக்கப் போகிறார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு தமிழக அரசியல் களம் படு பரபரப்பாகவே உள்ளது. ஓபிஎஸ் தியானம், அதிமுக பிளவு, சசிகலா சிறை சென்றது, தினகரன் சிறை சென்றது என பலரது தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டிருக்கிறது தமிழக அரசியல் நிகழ்வுகள்.
சசிகலாவினால் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, தற்போது தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். இப்படி எடப்பாடி பழனிச்சாமி மாறுவார் என்று சசிகலாவும், டிடிவி தினகரனும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
ஈபிஎஸ் அணி
சிறை செல்லும் முன்பாக கட்சியை காப்பாற்ற துணை பொது செயலாளராக டிடிவி தினகரனை நியமித்தார் சசிகலா. பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் டிடிவி தினகரன் சொல்படி கேட்டு நடந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இது எல்லாம் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து வரைக்கும் தான்.
ஒதுக்கத் தொடங்கிய அமைச்சர்கள்
சசிகலாவையும், டிடிவி தினகரனையும் ஒதுக்கி வைப்பதாக திடீரென்று ஒருநாள் மீட்டிங் போட்டு அமைச்சர்கள் அறிவித்தனர். டிடிவி தினகரனை யாரை நம்பி நிதியமைச்சர் ஆக ஆக்கினாரோ அந்த ஜெயக்குமார்தான் பகிரங்கமாக தினகரனை எதிர்த்தார்.
திஹார் சிறையில் தினகரன்
தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைதாகி திஹார் சிறை சென்றார் தினகரன். டெல்லி செல்லும் முன்பாக கட்சியில் இருந்து ஒதுங்கி விட்டதாக கூறினார். அதே தினகரன், கடந்த ஜூன் மாதம் ஜாமினில் விடுதலையான உடன் மீண்டும் கட்சிப் பணிகளை தொடங்க உள்ளதாகக் கூறினார்.
60 நாட்கள் கெடு
ஜாமீனில் வெளி வந்த உடனே பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்த தினகரன், சித்தியின் ஆலோசனைப்படி ஜூன் 5ஆம் தேதியன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி அதிமுகவின் இரண்டு தரப்புகளும் இணைவதற்கு 60 நாட்கள் அவகாசம் தருவதாகவும், அந்த 60 நாட்களுக்குள் இரு அணிகளுக்கும் இடையில் இணைப்பு ஏற்படவில்லை என்றால், தங்கள் தரப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
கெடு முடிந்தது
இந்த 60 நாட்களில் தமிழக அரசியலில் என்னென்னவோ மாற்றம் ஏற்பட்டு விட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் சர்வ சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே தினகரன் கொடுத்த 60 நாட்கள் கெடு முடியப்போகிறது.
தினசரி சந்திப்பு
டிடிவி தினகரனை அதிமுக எம்எல்ஏக்கள் தினசரி சந்தித்து பேசி வருகின்றனர். 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவாக உள்ளனர். எம்.பிக்கள், நிர்வாகிகள் தினசரி சந்தித்து பேசுவதோடு புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர்.
அரசியல் மாற்றம்
இந்த சூழ்நிலையில்தான் தமிழக அரசியலில் அடுத்தவாரம் மிக முக்கிய மாற்றம் வரப்போகிறது என்று தினகரன் ஆதரவாளர்கள் வாட்ஸ் அப்பில் பதிவிட்டு வருகின்றனர். அவர்களிடம் கேட்டதற்கு, கட்சியை கையில் எடுக்கப் போகிறார் தினகரன் என்று கூறியுள்ளனர்.
என்னதான் நடக்கும்?
அதிமுக கட்சி தலைமையகத்திற்குள் தினகரன் சென்று பல நாட்கள் ஆகிவிட்டன. அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சென்று வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு கொடுத்த கெடு முடிவடைய உள்ளதால் கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர என்ன செய்யப் போகிறார் தினகரன் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அணிகள் இணையுமா?
டிடிவி தினகரன் கொடுத்த கெடு முடிய இன்னும் சில தினங்களே உள்ளது. அணிகள் இணையும் முன்பாக ஈபிஎஸ் அணியை நோக்கு ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்களும் வரத் தொடங்கியுள்ளனர். ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு முன்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்து விடுமா? என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 6ல் அரசியல் மாற்றம்
பிப்ரவரி 7ஆம் தேதி முதல் தமிழக அரசியலில் பல்வேறு மாற்றம், திடீர் திடீர் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. ஆகஸ்ட் 6ல் அரசியல் மாற்றம் எதுவும் ஏற்படுமா? ஈபிஎஸ் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க தினகரன் ஏதும் செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.