தினகரனை குலை நடுங்க வைத்த தொடர் நள்ளிரவு சம்பவங்கள்... இன்றும் அரங்கேறும்?
இரட்டை இலை சின்னம் முடக்கம்,ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து, அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைக்கும் முடிவு ஆகிய தினகரனை குலை நடுங்க வைத்த நள்ளிரவு சம்பவங்களை போல் இன்று இரவு நடக்கலாம்.
சென்னை: இரட்டை இலை சின்னம் முடக்கம், ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து உள்ளிட்ட தினகரனுக்கு அதிர்ச்சியை தந்த சம்பவங்களை போல் இன்று இரவும் அவரை நள்ளிரவில் திஹாருக்கு தூக்கிப் போக போகிறது டெல்லி போலீஸ்.
ஜெயலலிதா மறைந்ததை அடுத்து ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. சசிகலா அணியின் சார்பில் டிடிவி தினகரனும், ஓபிஎஸ் அணியின் சார்பில் மதுசூதனனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். சின்னம் யாருக்கு என்ற பஞ்சாயத்தில் வேட்புமனு தாக்கல் செய்யாமல் இருந்தனர்.
அதிமுகவின் இரு அணிகளும் தங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை நாடின. இது தொடர்பான பிரமாண பத்திரங்களை சசிகலா தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் தாக்கல் செய்தன. இதைத் தொடர்ந்து டெல்லியில் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது 21-ஆம் தேதி நள்ளிரவு தினகரனின் வாழ்வில் மறக்க முடியாத நாளாக விளங்கியிருக்கும். அதாவது ஜெயலலிதா கடந்த 32 ஆண்டுகளாக கட்டிக் காத்த இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இது தான் தினகரனுக்கு முதல் அடி.
இதைத் தொடர்ந்து அதிமுகவை அதிமுக அம்மா கட்சி என்றும் இரட்டை இலைக்கு பதிலாக தொப்பி சின்னத்திலும் போட்டியிடுவதாக வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் தேர்தலில் ஜெயித்து விட வேண்டும் என்பதற்காகவே ரூ.100 கோடிக்கு மேல் வாரி இறைத்தார்.
இந்நிலையில் வேர்த்து விறுவிறுத்து வேகாத வெயிலில் கடுமையாக பிரசாரம் மேற்கொண்டார். இறுதி கட்ட பிரச்சாரம் முடியவிருந்த நிலையில், பணபபட்டுவாடா தொடர்பாக அவருக்கு நெருக்கமான அமைச்சரான விஜயபாஸ்கரின் வீடுகளில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டு பணம், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறையினர் தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து இரவோடு இரவாக தேர்தல் ரத்து சென்று அறிவிக்கப்பட்டது. இதனால் பணத்துக்கு பணமும் போய், உழைப்புக்கு உழைப்பும் போய் ஆடிபோய் விட்டார்.
அதிமுக இணைப்புக்கு சசிகலா, தினகரனும் கட்சியிலிருந்தால் சரிப்பட்டு வராது என்று ஓபிஎஸ் கூறியதால் நேற்றிரவு நள்ளிரவு முதல்வர் எடப்பாடி வீட்டில் ஆலோசனை நடத்திய மூத்த அமைச்சர்கள் சசிகலா, தினகரனின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்காது என்று அமைச்சர்கள் திடீரென அறிவித்ததனர். இதனால் மனம் நொந்தார் தினகரன்.
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரனிடம் இன்று இரவு விசாரணை நடத்த டெல்லி போலீஸ் வருகிறது. விசாரணையைத் தொடர்ந்து அவர் இன்று நள்ளிரவிலேயே கைது செய்யலாம் என்று தெரிகிறது.
இரட்டை இலை முடக்கம், ஆர்கே நகர் தேர்தல் ரத்து, அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் நள்ளிரவுகளில் நடப்பதால் லஞ்ச புகாரில் கைது நடவடிக்கையும் நள்ளிரவில் நடைபெற்றுவிடுமோ என்று மிகவும் பதற்றத்தில் காணப்படுகிறார் தினகரன்.