தினகரனுக்கு முக்கியத்துவம் தராவிட்டால் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு இல்லை.. எம்எல்ஏக்கள் போர்க்கொடி!
டிடிவி தினகரனை முன்னிலைப்படுத்தாவிட்டால் குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக ஆதரிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு தரமாட்டோம் என தினகரன் ஆதரவு எம்எல்ஏல்கள் கூறியுள்ளனர்.
சென்னை: டிடிவி தினகரனை முன்னிலைப்படுத்தினால் மட்டுமே குடியரசுத்தலைவர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி சொல்லும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கூறியுள்ளனர்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏல்கள் தங்கதமிழ்ச்செல்வன் தலைமையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று மாலை தலைமை செயலகத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, டிடிவி தினகரனின் கட்சி பணிக்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது. ஆட்சியை மட்டும் அமைச்சர்கள் கவனிக்க வேண்டும். கட்சியை தினகரன் பார்த்துக் கொள்வார் என்றும் எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், டிடிவி தினகரனை முன்னிலைப்படுத்த வேண்டும், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற வேண்டும், இப்தார் விருந்து டிடிவி தினகரன் தலைமையில் நடத்த வேண்டும். இதற்கெல்லாம் சம்மதம் தெரிவித்தால் குடியரசுத்தலைவர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி சொல்லும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று கூறினார்களாம். தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தினகரனை ஆதரிக்கும் 34 எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.