இரட்டை இலை: "ஸ்லீப்பர் செல்" சு.சுவாமியுடனான பேச்சுக்குப் பின் திட நம்பிக்கையில் தினகரன்!
சுப்பிரமணியன் சுவாமி கொடுத்த உத்தரவாதத்தின் அடிப்படையில்தான் தமக்கு இரட்டை இலை கிடைக்கும் என திடநம்பிக்கையில் இருக்கிறாராம் டிடிவி தினகரன்.
சென்னை: தம்முடைய ஸ்லீப்பர் செல் சுப்பிரமணியன் சுவாமியுடன் நேற்று இரவு பேசியதைத் தொடர்ந்தே நிச்சயம் இரட்டை இலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறாராம் டிடிவி தினகரன்.
தமிழகமே பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பது ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலைத்தான்... அதுவும் தேர்தல் முடிவுகளைவிட இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற நாளைய க்ளைமாக்ஸ்தான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்லீப்பர் செல்கள்
ஓபிஎஸ் அதிமுகவும் சசிகலா அதிமுகவும் படுதீவிரமான லாபிகளில் இறங்கியுள்ளன. சசிகலா அதிமுகவின் தினகரன், காஞ்சி சங்கரமடம், சுப்பிரமணியன் சுவாமி என பலரையும் ஸ்லீப்பர் செல்களைப் போல களமிறக்கி லாபியில் ஈடுபட்டு வருகிறார்.
சு.சுவாமியுடன் பேச்சு
இந்த நிலையில் நேற்று இரவு சுப்பிரமணியன் சுவாமியுடன் தினகரன் பேசியுள்ளார். அப்போது சுப்பிரமணியன் சுவாமி மிகவும் நம்பிக்கையோடு இருங்கள் என கூறியிருக்கிறார்.
திட்டவட்ட பேச்சு
இந்த உத்தரவாதத்தைத் தொடர்ந்தே இன்று நான் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவேன்; இரட்டலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் பதற்றத்துடன் திட்டவட்டமாக கூறினாராம் தினகரன்.
இரட்டை இலை இல்லையெனில்?
அதே நேரத்தில் இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும் தினகரன் போட்டியிடுவாரா? என்கிற சந்தேகமும் சசிகலா அணியில் எழுந்துள்ளது. இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலையில் தினகரன் மற்றொரு வேட்பாளரை அறிவிக்கவும் சாத்தியம் இருக்கிறதாம்.