இரட்டை இலை உங்களுக்கே!"மாப்பிள்ளை"யும் நீங்களே! ஆனால் தினகரன்...எடப்பாடியிடம் ஒரேபோடு போட்ட டெல்லி!
இரட்டை இலை சின்னம் தொடர்பாக டெல்லி போட்ட கண்டிஷனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உற்சாகத்திலும் தினகரன் தரப்பு பயங்கர அதிர்ச்சியிலும் இருக்கிறதாம்.
சென்னை: இரட்டை இலை சின்னம் தொடர்பாக டெல்லி போட்ட கண்டிஷனில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உற்சாகத்தில் இருப்பதாகவும் தினகரன் படுஅதிருப்தியில் இருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்க வேண்டும் என காஞ்சி மடாதிபதி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரை களமிறக்கியது தினகரன் தரப்பு. இருந்தபோதும் சுப்பிரமணியன் சுவாமியால் மட்டுமே டெல்லியில் லாபி செய்ய முடிந்திருக்கிறது.
தற்போது சுப்பிரமணியன் சுவாமியின் லாபியை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிறது தினகரன். இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் சில காய்நகர்த்தல்களை மேற்கொண்டிருந்தார். அப்போது டெல்லியில் இருந்து சில நிபந்தனைகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு விதிக்கப்பட்டதாம்.
உறுதி மொழி வேண்டும்..
அதாவது இரட்டை இலை சின்னத்தை சசிகலா அதிமுகவுக்கு ஒதுக்க ஏற்பாடு செய்கிறோம். அதே நேரத்தில் சசிகலா அதிமுக தரப்பில் இருந்து திட்டவட்டமான ஒரு உறுதிமொழி தரப்பட வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.
தினகரனுக்கு நோ முதல்வர் பதவி
எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உறுதிமொழி குறித்து கேள்வி கேட்கப்பட்டதாம். இரட்டை இலை சின்னத்தை சசிகலா அதிமுகவுக்கு ஒதுக்கும் நிலையில் தினகரன் ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வென்றாலும் முதல்வர் நாற்காலியில் உட்கார கூடாது என்பதுதானாம்.
அதிருப்தியில் தினகரன்
இதை தினகரனுக்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தெரிவிக்கிறது. சற்றும் எதிர்பார்க்காத தினகரன் தரப்பு வேண்டா வெறுப்பாக சரி என கூறியுள்ளதாம். எங்கே தினகரன் முதல்வர் பதவியை பறித்துவிடுவாரோ என மவுனமாக இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இந்த உறுதிமொழியால் உற்சாகத்தில் இருக்கிறதாம். ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமலேயே போய்விடுமோ என அதிருப்தியில் இருக்கிறதாம் தினகரன் தரப்பு.
இன்னொரு கூவத்தூர்?
இது குறித்து தமது நால்வர் அணியிடம் விவாதித்திருக்கிறார் தினகரன். அதனால் என்ன இன்னொரு முறை கூவத்தூரை நடத்திக்காட்டிவிடலாம்... எம்.எல்.ஏ.வான பின்னரும் நீங்கள் முதல்வராகவில்லை எனில் எங்களால் அதை சகித்துக் கொள்ள முடியாது என துதிபாடியிருக்கிறதாம் நால்வர் அணி.