நாளை காலை 10 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறோம்.. வெற்றிவேல் ஆவேசம்!
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் நாளை காலை 10 மணிக்கு ஆளுநரை சந்திக்க உள்ளதாக வெற்றிவேல் கூறியுள்ளார்.
சென்னை : எங்கள் தரப்பு நியாயத்தை ஆளுநரை சந்தித்து நாளை முறையிடப் போகிறோம் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
அதிமுக அணிகள் இணைப்புத் தகவல் வெளியான போதும் தினகரன் தரப்பு அமைதியாகவே இருக்கிறது. இதனால் அடுத்தகட்டமாக இவர்கள் என்னசெய்யப்போகிறார்கள் என்ன எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்தது. இன்று காலை முதல் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைப்பு தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில் தினகரன் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
மாலை 8 மணியளவில் ஜெயலலிதா சமாதிக்கு வந்த தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் சிறிது நேரம் சமாதி முன் அமர்ந்து தியானம் செய்தனர். சுமார் 20 நிமிடங்கள் தியானம் செய்துவிட்டு வந்த வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய வெற்றிவேல், நாளை காலை ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், காலை 10 மணியளவில் அவரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
"தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க நேரம் கேட்டோம், அவர் நாளை காலை 10 மணிக்கு நேரம் கொடுத்திருக்கிறார். ஆளுநரை சந்தித்து என்ன விஷயங்களை சொல்லப் போகிறோம் என்பதை சந்தித்த பிறகு தான் சொல்ல முடியும். முன்கூட்டியே ஊடகங்களிடம் சொல்லிவிட்டால் அது மரபுபடி சரியானதல்ல" என்றும் வெற்றிவேல் கூறியுள்ளார்.