எம்புட்டு அடிதான் வாங்குகிறது.... பெரா வழக்கில் அப்பீல் மனுவை வாபஸ் பெற்ற தினகரன்!
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் ஹைகோர்ட் உத்தரவுக்கு எதிரான அப்பீல் மனுவை டிடிவி தினகரன் இன்று வாபஸ் பெற்றுள்ளார்.
சென்னை : அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தாம் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை டிடிவி தினகரன் திரும்பப் பெற்றுள்ளார்.
1994ம் ஆண்டு அந்நிய செலாவணி மோசடி செய்ததாக டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறை 2 வழக்குகளை தொடர்ந்தது.இந்த வழக்கில் இருந்து தினகரனை விடுவித்து எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
மேலும் மீண்டும் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து டிடிவி தினகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததா என்பதற்கான ஆவணங்களை கடந்த 13-ந் தேதியன்று சமர்ப்பிக்குமாறு தினகரன் தரப்பிற்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் காலை 10.30 மணி, மாலை 3 மணி என இரண்டு முறை டிடிவி தினகரன் நேரில் ஆஜரானார்.
அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது என்றும், அரசு தரப்பு வாதத்தை குறுக்கு விசாரணை நடத்த அவகாசம் தேவை என்றும் தினகரன் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. டிடிவி தினகரன் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி மலர்மதி இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மே மாதம் 10-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதனிடையே எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போதே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தினகரன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.