வரவேற்க யானை ரெடி.. மாநிலப் பொதுக்குழுவுக்கு ஆயத்தமாகும் மதிமுக!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பிப்ரவரி 1ம் தேதி நடைபெறும் மதிமுகவின் மாநில பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து வருவதால் தூத்துக்குடி மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 23வது மாநில பொதுக்குழு-செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் நடைபெறவுள்ளது.
நாளை அதாவது பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10மணிக்கு தூத்துக்குடி - எட்டயபுரம் சாலையில் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள ஏ.வி.எம் கமலவேல் மகாலில் மதிமுகவின் பொதுக்குழு-செயற்குழுக் கூட்டம் நடக்கிறது.
திருப்பூர் துரைசாமி தலைமை
மாநில பொதுக்குழுக்கூட்டத்திற்கு அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை வகிக்கிறார். பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றுகிறார். கூட்டத்தில் கழகத்தின் முன்னணி நிர்வாகிகள், தமிழகம் முழுவதுமுள்ள மாநில, மாவட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.
இன்று வைகோ தலைமையில் ஆலோசனை
இக்கூட்டத்திற்கு முன்பாக இன்று (31ம் தேதி) மாலை 5மணிக்கு தூத்துக்குடி சுகம் ஹோட்டலில் மதிமுக மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக்கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெறவுள்ளது.
ஜோயல் தலைமையில்
மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம், மாநில பொதுக்குழு கூட்டம் என இரண்டு நாட்கள் தூத்துக்குடியில் நடைபெறும் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் ஜோயல் தலைமையில் மதிமுகவினர் செய்து வருகின்றனர்.
வைகோவை வரவேற்று சுவர் விளம்பரங்கள்
பொதுச்செயலாளர் வைகோவை வரவேற்று மாவட்டம் முழுவதும் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டுள்ளது.
கொடிகள், தோரணங்கள்
இதுமட்டுமின்றி தூத்துக்குடிக்கு வரும் மதுரை, திருநெல்வேலி நான்கு வழிச்சாலைகள் மற்றும் மாநகரின் முக்கிய சாலைகளின் இருபுறமும் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டுள்ளதுடன், வரவேற்பு டிஜிட்டல் போர்டுகள் மற்றும் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்து. இதுபோன்று அலங்கார வளைவுகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
பிரமாண்டமாக நடத்திட
தென்தமிழகத்தில் முதல்முறையாக நடைபெறும் மதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் பிரமாண்டமாக நடத்திடவேண்டும் என்ற நோக்கத்தில் இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது.
உடுமலைப்பேட்டையிலிருந்து இரண்டு யானைகள்
ஏ.வி.எம்.கமலவேல் மகால் முன்பு உடுமலைப்பேட்டையில் இருந்து கொண்டுவரப்பட்ட பிரம்மாண்டமான இரண்டு யானைகள் நுழைவுவாயில் முன்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
விழாக்கோலத்தில் தூத்துக்குடி
மதிமுகவின் மாநில பொதுக்குழு-செயற்குழு கூட்டத்தால் தூத்துக்குடி மாநகரம் மதிமுகவின் கொடி- தோரணங்களால் விழாக் கோலம் பூண்டுள்ளது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் ஜோயல் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் மேற்கொண்டுள்ளனர்.