முதலீடுகளில் லாபம் பார்த்த தூத்துக்குடி... பாவப்பட்ட ராமநாதபுரத்திற்கு ஒரே ஒரு திட்டம் மட்டுமே!
சென்னை: சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் இறுதியில் தமிழகத்திற்கு ரூ. 2.4 லட்சம் கோடி முதலீடுகள் கிடைத்துள்ள நிலையில் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளர் மாவட்டங்களுக்கேப் போயுள்ளன. அதாவது வழக்கம் போல சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கே அதிக திட்டங்கள் கிடைத்துள்ளன.
மறுபக்கம் கடைக்கோடி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தை முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட கண்டு கொள்ளாமல் விட்டுள்ளனர். ரூ. 500 கோடியில் ஒரே ஒரு திட்டம் மட்டுமே ராமநாதபுரத்தைத் தேடி வந்துள்ளது. இது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ராமநாதபுரம் மக்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்துறையில்தான் அதிக அளவிலான முதலீடுகளை தமிழகம் ஈர்த்துள்ளது. அதாவது 1 லட்சத்து 4 ஆயிரத்து 286 கோடி அளவுக்கு முதலீடுகள் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம்தான் இந்த முதலீடுகளால் பெரும் லாபத்தைச் சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலீடுகள் குறித்த ஒரு பார்வை..
மொத்த முதலீடுகள்
மொத்தமாக 98 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அதன் மூலமாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள முதலீட்டுத் தொகையின் அளவு ரூ. 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 லட்சம் கோடியாகும்.
வேலைவாய்ப்பு
இந்த முதலீடுகள் மூலம் மொத்தம் 4 லட்சத்து 70 ஆயிரத்து 65 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
ஐடி துறையில் அதிகம் பேருக்கு வேலை
ஐடி துறையில்தான் அதிகம் பேருக்கு வேலை கிடைக்கும். அதாவது 2 லட்சத்து 5 ஆயிரத்து 500 பேருக்கு வேலை கிடைக்கும். தொழில்துறையில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 455 பேருக்கு வேலை கிடைக்கும்.
அதிக ஒப்பந்தம் தொழில்துறைக்கு
அதிக அளவிலான ஒப்பந்தங்கள் தொழில்துறையில்தான் போடப்பட்டுள்ளது. அதாவது 50 ஒப்பந்தங்கள். அடுத்தபடியாக ஐடி துறையில் 17ம், மின்துறையில் 15ம் போடப்பட்டுள்ளன.
விவசாயம் பரிதாபம்
பரிதாப நிலையில் விவசாயத்துறை உள்ளது. அதில் 2 ஒப்பந்தம் மட்டுமே போடப்பட்டுள்ளது. மொத்த மதலீடு ரூ.800 கோடியாகும். ஆனால் 68 ஆயிரத்து 750 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்
தொழில்துறையைப் பொறுத்தவரை காஞ்சிபுரம்தான் அதிக அளவிலான திட்டங்களை ஈர்த்துள்ளது. அதாவது மொத்தம் 14 திட்டங்கள் அந்த மாவட்டத்திற்குக் கிடைத்துள்ளது. அதன் மொத்த முதலீட்டு உத்தரவாத மதிப்பு ரூ. 7845 கோடி அளவுக்கு முதலீடுகளுக்கு உத்தரவாதம் தரப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
அதிக அளவிலான திட்டங்களை காஞ்சிபுரம் பெற்றிருந்தாலும் கூட தூத்துக்குடி மாவட்டத்திற்குத்தான் தொகையில் ஜாக்பாட் கிடைத்துள்ளது. இந்த மாவட்டத்திற்கு 5 திட்டங்கள் கிடைத்துள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ. 52,620 கோடி ஆகும்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்திற்கு 6 திட்டங்கள் கிடைத்துள்ளன. இதன் முதலீட்டு மதிப்பு ரூ. 4679 கோடியாகும்.
சென்னை
சென்னைக்கு 5 திட்டங்கள் கிடைத்துள்ளன. இதன் முதலீட்டு மதிப்பு ரூ. 1283 கோடியாகும். இப்போதுதான் முதல் முறையாக சென்னைக்கு குறைந்த அளவிலான முதலீடுகள் வந்துள்ளன.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரிக்கு ரூ. 4950 கோடி அளவிலான 4 திட்டங்கள் கிடைத்துள்ளன.
திருச்சி
திருச்சிக்கு 2677 கோடியில் திட்டங்கள் கிடைத்துள்ளன. செய்யாறுக்கு 4100 கோடி அளவிலான திட்டம் கிடைத்துள்ளது.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்திற்கு 534 கோடி அளவிலான திட்டம் கிடைத்துள்ளது. நெல்லைக்கு 175 கோடி, சேலத்திற்கு 1025 கோடி, கடலூருக்கு 18,000 கோடியிலான திட்டங்கள் கிடைத்துள்ளன.
வேலூர்
வேலூர் மாவட்டத்திற்கு 4500 கோடி அளவிலான திட்டம் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இது அரக்கோணத்தில் செயல்படுத்தப்படும்.
கோவை
கோவைக்கு 226 கோடி அளவிலான திட்டம் கிடைத்துள்ளது. பிற பெரிய நகரங்கள் இந்தப் பட்டியலில் இல்லை.
மின்துறை
மின்துறையைப் பொறுத்தவரை சுஸ்லான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் சேர்ந்து தமிழகம் முழுவதும் மொத்தமாக ரூ. 85,361 கோடி அளவிலான திட்டங்களை செயல்படுத்தவுள்ளன. இது போக தூத்துக்குடியில் ரூ. 15,620 கோடி திட்டமும், கடலூரில் 16,600 கோடி திட்டமும் அமல்படுத்ப்படவுள்ளது.
ஐடியில் அள்ளிய சென்னை
ஐடி துறையைப் பொறுத்தவரை சென்னைக்கே பெரும்பாலான திட்டங்கள் போயுள்ளன. சென்னை, கோவை, காஞ்சிபுரத்தில் மொத்தமாக ஒரு நிறுவனம் ரூ. 1775 கோடியில் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. இது போக சென்னைக்கு மட்டும் 8577 கோடி அளவிலான திட்டங்கள் கிடைத்துள்ளன.
திருச்சி - மதுரை
திருச்சி, மதுரையில் 1500 கோடியிலான தகவல் தொழில்நுட்பத் திட்டம் செயல்படுத்தப்படும். சேலத்திற்கு 98 கோடி அளவிலான திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.
கைத்தறி ஜவுளி காதி
கைத்தறி ஜவுளி காதித் துறையில் கடலூர் ரூ. 500 கோடி, திருப்பூர் 496, விருதுநகர் 151, ராமநாதபுரம் 500, கோவை 130, திருவண்ணாமலை 94, காஞ்சிபுரம் 84 என திட்டங்கள் கிடைத்துள்ளன.
கால்நடை, பால்வளம் மீன்வளம்
கால்நடை, பால்வளம், மீன்வளத்துறையில் காஞ்சிபுரம் ரூ. 100 கோடி, திருவள்ளூர் 200, கடலூர் 100, திருவள்ளூர் 100, கன்னியாகுமரி 150, விழுப்புரம் 650 கோடி அளவில் திட்டங்கள் கிடைத்துள்ளன.