மகளிர் தின நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு... புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் - கேமரா உடைப்பு
சென்னை: மகளிர் தினத்தை ஒட்டி ஒளிபரப்பாக இருந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து , சென்னையில் புதிய தலைமுறை சேனல் ஒளிப்பதிவாளர் மீது இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் புதிய தலைமுறை சேனலின் அலுவலகம் இயங்கி வருகிறது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று அச்சேனலில், உரக்கச் சொல்லுங்கள் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருந்தது. இந்த நிகழ்ச்சி பெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா என்ற தலைப்பில் தயாரிக்கப் பட்டிருந்தது
கடந்த சில நாட்களாக இந்த நிகழ்ச்சியின் புரோமோ தொடர்ந்து ஒளிபரப்பப் பட்டுக் கொண்டிருந்தது. அதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டால் தாக்குதல் நடத்துவோம் என அவர்கள் மிரட்டியதாகத் தெரிகிறது.
எனவே, முன்னெச்சரிக்கையாக புதிய தலைமுறை தொலைக்காட்சி கேட்டுக் கொண்டதிற்கிணங்க, அந்த அலுவலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப் பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை அலுவலகத்திற்கு அருகே இருந்த கடையில் தேநீர் அருந்த கையில் கேமராவுடன் சென்ற புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. அவரது கையில் இருந்த கேமராவையும் உடைத்து நொறுக்கினர்.
பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் இத்தாக்குதலை வேடிக்கைப் பார்த்ததாக புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், அப்போது அலுவலகத்திற்கு வந்த பெண் செய்தியாளர் ஒருவரையும் கும்பல் தாக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இத்தாக்குதலில் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு சென்னைப் பத்திரிக்கையாளர் சங்கம் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.