நியுஸ் 7 தமிழ் தொலைகாட்சியின் செய்தியாளரை தாக்கியதாக திமுகவினர் மீது புகார்
சிவகங்கை: காரைக்குடி அருகே செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் மீது திமுகவினர் கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தேவக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையினை அப்பகுதியின் திமுகவின் முன்னாள் நகரமன்ற துணைத்தலைவரும், திமுகவின் நகரத் தலைவருமான பொரி.பாலா என்பவர் குத்தகைக்கு நடத்தி வருகிறார். இரண்டு வருட காலமாக நகராட்சிக்கு எந்தவித வரியும் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து நகராட்சி ஆணையர் சார்பில் பாலாவுக்கு 8 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை தொடர்ந்து தேவக்கோட்டை நகராட்சியில் நிலவி வருகின்றது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் 7 தமிழின் செய்தியாளர் பாலமுருகன் மீது திமுக நகரத்தலைவர் பாலா உட்பட 7 பேர் கொண்ட கும்பல் கொலைவெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
உயிருக்கு போராடிய நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் பாலமுருகனை அங்கிருந்தவர்கள் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், செய்தியாளரைத் தாக்கிய பெரி பாலாவைக் கைது செய்து செய்தனர்.