என்.எல்.சி.யை முற்றுகையிட்டு போராட்டம்- தி.வேல்முருகன் உட்பட 2 ஆயிரம் பேர் கைது!
நெய்வேலி: ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் உட்பட 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், கூடுதல் சம்பளம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 45-வது நாளாக இன்று வேலைக்கு செல்ல வில்லை.
தொழிலாளர் நலத்துறை அதிகாரி முன்னிலையில் என்.எல்.சி. நிர்வாகத்துடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை. எனவே முற்றுகை, உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
எனினும் என்.எல்.சி. நிர்வாகம், ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. இதனால் பேரணியாக சென்று நெய்வேலி என்.எல்.சி. தலைமை அலுவலகம் முற்றுகையிடப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலையில் நெய்வேலி 1-வது வட்டத்தில் உள்ள நேரு சிலை பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தொழிற்சங்கத்தினர் சுமார் 2 ஆயிரம் பேர் திரண்டனர். என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களும் திரண்டனர். எனவே அப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அந்த இடத்துக்கு வந்தார். பின்னர் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வேல்முருகன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பேசினர்.
பிறகு திட்டமிட்டபடி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட ஒப்பந்த தொழிலாளர்கள் வேல்முருகன் தலைமையில் பேரணியாக சென்றனர். இந்த அமைத்து ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். முற்றுகை போராட்டத்துக்கு அனுமதி மறுத்து வேல்முருகன் உள்பட சுமார் 2 ஆயிரம் பேரை கைது செய்தனர்.