இலங்கையில் காணாமல் போனோரை கண்டுபிடிக்க கோரி சென்னை ஐ.நா. அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
சென்னை: இலங்கையில் போரின் போதும் பின்னரும் சிங்கள அரசால் திட்டமிட்டு காணாமல் போகச் செய்யப்பட்டோரை கண்டுபிடிகக்க் கோரி சென்னையில் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் முன்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் அவையால் ஆகஸ்ட் 30-ந் தேதியன்று சர்வதேச காணாமல் போனோர் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி இலங்கையில் போரின் போதும் அதற்கு பின்னரும் காணாமல் அடிக்கப்பட்டோரை மீட்கக் கோரி சென்னை அடையாறில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேச விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு, நாடு கடந்த தமிழீழ அரசின் தோழமை மையத்தின் பேராசிரியர் சரசுவதி, காஞ்சி மக்கள் மன்றத்தின் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஐ.நா. அலுவலகத்தில் மனு ஒன்றும் கொடுக்கப்பட்டது.