ஜெ. உடல் நிலை பற்றி வதந்தி.. கோவையில் கைதான வங்கி ஊழியர்கள் இருவருக்கு ஜாமீன்
கோவை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட வங்கி ஊழியர்கள் இருவருக்கு ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல் சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்து, பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர், வலைத்தளங்கள் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக வதந்திகள் தீவிரமாக பரப்பப்பட்டன.
இதுகுறித்து, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராமச்சந்திரன், வடக்கு சென்னை, துணை செயலாளர் ராஜ்கமல் ஆகியோர் சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்திருந்தனர். இதன்பேரில் போலீசார் 43 வழக்குகளை பதிவு செய்திருந்தனர்.
இதையடுத்து வதந்தி பரப்பிய நாமக்கல்லை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சதீஷ் மற்றும் மதுரையைச் சேர்ந்த மாடசாமி ஆகியோர் கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் தூத்துக்குடியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர், திருமணி செல்வம், சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பாலசுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் அறிவித்தனர்.
மேலும் கோவையில் புனிதா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கனரா வங்கி ஊழியர்கள் ரமேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைதான வங்கி ஊழியர்கள் 2 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. வங்கி ஊழியர்கள் சுரேஷ், ரமேஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.