சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இருவர் காயம்
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் இருவர் காயமடைந்தனர்.
விருதுநகர்: சிவகாசி அருகே செவல்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 850க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 2 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாவும் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர்.
இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால், விதிமுறை மீறல்கள் காரணமாக இங்கு அடிக்கடி விபத்துக்கள், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
தீபாவளி முடிந்துள்ள நிலையில் தற்போது பட்டாசு ஆலை அறைகளை புதுப்பிக்கும் பணியில் உரிமையாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் பட்டாசு தயாரித்தது போக மீதமுள்ள கழிவு பட்டாசுகளை வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டதில் இருவர் காயமடைந்தனர்.
சிவகாசி அருகே செவல்பட்டியில் இந்த விபத்து நிகழ்ந்தது. மேலும் படுகாயமடைந்த தொழிலாளர்கள் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பெண்கள் உள்பட 8 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.