ஜெயலலிதாவின் விருத்தாச்சலம் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கிய இருவர் பலி !
விருத்தாச்சலம்: அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கலந்துகொண்ட விருத்தாச்சலம் பொது கூட்டத்தில் வெயில் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கிய இரண்டு பேர் உயிரிழந்ததனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்குட்பட்ட 13 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆதரித்து முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இன்று தேர்தல் பிரசாரம் செய்தார்.
ஜெயலலிதா பிரசாரக் கூட்டம் பட்டப் பகலில், கடும் வெயிலில் நடந்ததால் கூட்டத்திற்கு வந்தவர்கள் வெயிலில் உட்கார முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளானார்கள். குறிப்பாக பெண்கள், வயதானவர்கள் கடும் பாதிப்படைந்தனர்.
குடிக்கக் கூட தண்ணீர் இல்லாததால் அவர்களால் வெயிலில் நீண்ட நேரம் அமர்ந்து ஜெயலலிதா வாசித்ததை முழுமையாக கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக வெயிலில் இருந்ததாலும், கூட்ட நெரிசலாலும் 15 க்கும் மேற்பட்டோருக்கு மயக்கம் ஏற்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் ஜெயமணி (குறிஞ்சிப்பாடி), லோகநாதன் (வடக்கு வெள்ளுர்), ராமஜெயம் (வில்வபெருந்துறை), செந்தாமரை கண்ணன் (காடாம்புலியூர்), முத்துலக்ஷ்மி (விருத்தாச்சலம்), பூங்காவனம் (ராமச்சந்திரன் பேட்டை) ஆகியோர் விருந்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், ராதாகிருஷ்ணன் என்பவர் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்குச் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதனிடையே காவல் பணியில் இருந்த விஜயசாந்தி என்பவர் மீது இருசக்கர வாகனம் விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. சிதம்பரத்தை சேர்ந்த மற்றொரு காவலரான கருணாகரன் என்பவருக்கு கடும் வெயிலால் மயக்கம் ஏற்பட்டது. இருவரும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் கருணாகரன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.