காட்டு யானைகளின் அட்டகாசம்- வன ஊழியரையும், விவசாயியையும் மிதித்தே கொன்ற யானைகள்
வேலூர்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே காட்டு யானைகளின் அட்டகாசத்தால் வனத்துறை ஊழியர் ஒருவரும், விவசாயி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
வாணியம்பாடி அருகே ஆந்திர மாநில எல்லையான நனியாலம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 17 யானைகள் புகுந்தன. இதையடுத்து ஆந்திர மாநில வனத்துறையின் தற்காலிக ஊழியர்கள் முனியப்பா உள்ளிட்ட 15 பேர் நேற்று அதிகாலை சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பட்டாசுகளை வெடித்தும், தீப்பந்தங்களை காட்டியும் கும்கி யானைகள் மூலமும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது யானைக் கூட்டம் வனத்துறை ஊழியர்களை விரட்டியது.
பயந்து போன அவர்கள் தப்பிஓடினர். அங்குள்ள முட்புதரில் முனியப்பா பதுங்கினார். ஆவேசம் அடைந்த யானை ஒன்று முனியப்பாவை காலால் மிதித்துக் கொன்றது.
அதேபோல் பேரணாம்பட்டு அருகே சேராங்கல் பகுதியில் நேற்று பிற்பகல் 3:40 மணியளவில் புகுந்த யானைக் கூட்டத்தை அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி துரைசாமி உள்ளிட்ட கிராம மக்கள் விரட்டினர்.
ஆவேசமடைந்த யானை ஒன்று துரைசாமியை காலால் மிதித்து கொன்றது. இச்சம்பவங்கள் குறித்து வனத்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.