நேற்று அஷ்டமி, இன்று நவமி, நாளை முகூர்த்தம்.. "நல்ல நாள்" பார்த்த எடப்பாடி!
முதல்வர், அதிமுக பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக இரு அணிகளின் தலைவர்களும் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர்.
சென்னை: முதல்வர், அதிமுக பொதுச் செயலாளர் யார் என்பது தொடர்பாக இரு அணிகளின் தலைவர்களும் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர். நல்ல நாளாக நாளைய நாளைத் தேர்வு செய்தது எடப்பாடியாராம்.
அதிமுகவின் இரு அணிகளும் இணையும் வைபவம் ஓ.பன்னீர் செல்வத்தின் நிபந்தனைகளால் இழுப்பறி நிலவியது. இந்நிலையில் நிபந்தனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இரு அணிகளும் இன்று ஆலோசனை, நாளை ஆலோசனை என்று நாள் கடத்தி கொண்டே சென்றனர்.
ஓபிஎஸ்ஸின் நிபந்தனைகள்
சசிகலா, தினகரனை விரட்டியடித்தல், முதல்வர் ,பொதுச் செயலாளர் ஆகிய பதவிகள் தனக்கு வழங்க வேண்டும் என்றும் தன் அணியில் உள்ள செம்மலை, மாஃபா பாண்டியராஜன் உள்பட 6 பேருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் துணை முதல்வர் பதவி எடப்பாடிக்கு வழங்கப்படும் என்றும் நிபந்தனைகளை விதித்தது ஓ.பி.எஸ் தரப்பு.
முதல்வர் பதவியை விட்டு கொடுக்க மறுப்பு
ஆனால் முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க எடப்பாடி தரப்பு மறுப்பு தெரிவித்து வருகிறது. மேலும் மக்களவை துணை சபாநாயகர் தும்பிதுரையும் எடப்பாடி முதல்வர் பதவியில் நீடிப்பார் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இந்நிலையில் இன்று ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த எம்எல்ஏ-க்கள் அவரது வீட்டில் ஆலோனை நடத்துகின்றனர். அப்போது முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
கடும் எதிர்ப்பு
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு முதல்வர் பதவி கொடுக்க கூடாது என்றும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியே முதல்வராக தொடரவேண்டும் என்றும் கர்நாடக அதிமுக அம்மா கட்சி செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார். தினகரனை விலக்கியதால் மனம் புண்பட்டாலும் அவரது செயல் உயர்வாக உள்ளது. சசிகலா குடும்பத்தை பற்றி தம்பிதுரை பேசுவது ஏற்புடையதல்ல. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை விட்டுக்கொடுக்க கூடாது. கட்சி நலன் கருதி தினகரன் பதவியை விட்டுக்கொடுத்ததை அனைவரும் பாராட்டுகின்றனர் என்றார் அவர்.
முதல்வர் பதவியை தக்க வைக்க...
மறுபக்கம், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என்ற கலக்கத்தில் எடப்பாடியார் உள்ளார். இதனால் பேச்சுவார்த்தையில் தாமே முதல்வராக நீடிக்க வேண்டும் என்பதால் பேச்சு நடத்தும் நாள் குறித்து அக்கறை காட்டுகிறார். நேற்று அஷ்டமி, இன்று நவமி என்பதால் இரு நாள்கள் திட்டமிட்ட பேச்சுவார்த்தை தள்ளிபோனது. நாளை முகூர்த்த நாள் என்பதால் இரு அணிகளின் தலைவர்களும் நாளை ஆலோனைக் கூட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர். நாளை எடப்பாடிக்கு நல்ல நாளாக அமையுமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நாளை மறு நாள் சனி என்பதையும் யாரும் மறந்து விடாமல் இருந்தா சரித்தான்!