நெடுவாசல் போராட்டத்தில் பங்கேற்க நோட்டீஸ்... கைதான இளம் பெண்கள் - வீடியோ
சேலம் அரசு மகளிர் கல்லூரி முன்பு கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டங்களில் பங்கேற்க அழைப்பு விடுத்து நோட்டீஸ் விநியோகம் செய்ததற்காக இரண்டு பெண்கள் கைது செய்ப்பட்டுள்ளனர்.
சேலம்: சேலம் கோரிமேடு அரசு மகளிர் கல்லூரி முன்பு கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டங்களில் ஈடுபட மாணவிகளிடம் நோட்டீஸ் விநியோகித்ததற்காக இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கல்லூரி முன்பு வளர்மதி மற்றும் ஜெயந்தி ஆகிய பெண்கள் நோட்டீஸ் விநியோகித்து உள்ளனர். அதில் கதிராமங்கலம் மற்றும் நெடுவாசலில் நடைபெற்றுவரும் போராட்டங்களில் பங்குபெற அம்மாணவிகளை அழைக்கும் வாசகங்கள் அந்த நோட்டீஸில் இடம்பெற்றுள்ளன.
அதையடுத்து போலீசார் நோட்டீஸை விநியோகித்த வளர்மதி மற்றும் ஜெயந்தி ஆகியோரை வீட்டில் சென்று கைது செய்துள்ளனர். இதில், வளர்மதி அரசுக்கு எதிராக 10க்கும் மேற்பட்ட போராட்டங்களில் கலந்துகொண்டதால் தனித்த அடையாளம் உடையவராக உருவாகியுள்ளார். அதனால் அவருக்கும் மாவோயிஸ்ட் இயக்கத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து கைதான வளர்மதி கூறுகையில், ஜனநாயக நாட்டில் ஒரு போராட்டத்துக்கு நோட்டீஸ் விநியோகிப்பது ஒருவருடைய அடிப்படை உரிமை. இதற்கெல்லாம் போலீஸ் கைது செய்வது அடிப்படை மனித உரிமை மீறல் என கூறினார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் இருந்த பெண்கள் சிறையில் அனுபவித்த கொடுமைகளை பகிரங்கமாகக் கூறியபோது அது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெண்களை நிர்வாணப்படுத்தி சோதனை செய்வார்கள் என்கிற தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.