For Daily Alerts
Just In
சென்னையில் 2 பெண்கள்– முதியவர் படுகொலை: அடுத்தடுத்து கொலைகளால் போலீஸ் திணறல்
சென்னை: சென்னை நகரில் கடந்த சில நாட்களாக தனியாக இருக்கும் பெண்களும், முதியவர்களும் நகை, பணத்திற்காக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில், கடந்த சிலநாட்களாக, அடுத்தடுத்து கொடூர கொலை சம்பவங்கள் அரங்கேறியதால், உயர் போலீஸ் அதிகாரிகள் திடுக்கிட்டுப் போயுள்ளனர்.
- சென்னை கொளத்தூர் கிரிஜா நகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஹேமாவதி (52). கணவரை இழந்த இவர், மகன்கள் செந்தில்குமார், கார்த்திக் ஆகியோருடன் வசித்து வந்தார். செந்தில்குமார் சிங்கப்பூரில் வேலை செய்து வரும் நிலையில் கார்த்திக் மட்டும் தாயுடன் இருந்தார். அதே பகுதியில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். பகலில் இவர் கடைக்கு சென்று விடுவார். இதனால் ஹேமாவதி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.
- அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 3-வது மாடியில் சிறிய வாடகை வீட்டில் வசித்து வந்த இவர் நேற்று மாலை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த 7 பவுன் செயினும் கொள்ளையடிக்கப்பட்டது.
- ஹேமாவதியை கொலை செய்த மர்ம ஆசாமிகள் பட்டப்பகலிலேயே இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இச்சம்பவம் பற்றி துப்பு துலக்குவதற்காக 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- கடந்த 10-ஆம்தேதி பரங்கிமலையில் கொள்ளையர்களால் கடுமையாக தாக்கப்பட்ட 90 வயதான புஷ்பராணி என்ற முதிய பெண்மணியும் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். பரங்கிமலை மாகாளியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்த இவரும் வீட்டில் தனியாக இருந்தவர்தான்.
- மேடவாக்கத்தில் வசித்து வந்த புஷ்பராணியின் மகள் மெர்சி தாயை பார்ப்பதற்காக வந்திருந்தார். அப்போது தான், புஷ்பராணி வீட்டுக்குள் படுகாயங்களுடன், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
- கடந்த, 15ம் தேதி, புதுவண்ணாரப்பேட்டை, வ.உ.சி., நகரில், குணசுந்தரி, 35 மற்றும் அவரது ஏழு வயது சிறுவன் மகேஷ்குமார் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டனர். கொலை செய்த, குணசுந்தரியின் இரண்டாவது கணவன் ராஜுவை போலீசார் தேடி வருகின்றனர். அதே நாளில், மண்ணடியில், அடுக்குமாடி குடியிருப்பில் மருந்து கம்பெனி விற்பனை பிரதிநிதி, துாத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த, கனகராஜ் என்பவரை, அவரது நண்பர்கள் சுப்பிரமணி, விக்னேஷ் ஆகியோர் கொன்று விட்டு தப்பினர். அவர்களும் சிக்கவில்லை.
- இந்த கொலைகள் பற்றிய பரபரப்பு அடங்குவதற்குள், காதல் பிரச்னையில், மயிலாப்பூர் பல்லக்கு மாநகரில், கார்த்திக் என்ற வாலிபர், கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் மட்டும், மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
- இதற்கிடையில், செவ்வாய்கிழமையன்று, சூளைமேட்டில், தனியாக வசித்த, தி.மு.க., முன்னாள் பிரமுகரும், கோடீஸ்வரருமான, வேலியப்பன், 89, என்பவரை மர்ம நபர்கள் கழுத்தறுத்து கொன்று, நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
- பிற்பகல், 1:35மணிக்கு அந்த கொலை வழக்கில், போலீசார், வேலியப்பன் சடலத்தை மீட்பதற்குள், கே.கே. நகரில், சசிகலா என்பவர், கூலிப்படையை ஏவி, அ.தி.மு.க., நிர்வாகி, விஸ்வநாதன் என்கிற புல்லட் விஸ்வநாதனை தீர்த்து கட்டினார்.
- சென்னையில், கடந்த, சிலநாட்கள் இடைவெளியில், அடுத்தடுத்து எட்டு கொடூர கொலை சம்பவங்கள் அரங்கேறியதால், உயர் போலீஸ் அதிகாரிகள் திடுக்கிட்டுப் போயுள்ளனர்.
- ரோந்து பணியில் ஏற்பட்ட தொய்வு காரணமாக, இந்த கொலைகள் நடந்துள்ளதா என, சந்தேகிக்கின்றனர். அதனால், ரோந்து பணிகள் குறித்து, உளவு போலீசார் கண்காணிப்பு நடத்தி, அறிக்கை தர வேண்டும் என, உத்தரவிட்டு இருப்பதாக, கமிஷனர் அலுவலக வட்டாரம் தெரிவித்துள்ளது.
Comments
English summary
Adding to the count of violent crimes against women in the city over the past few months, a 90-year-old woman who was brutally attacked in St. Thomas Mount, a fortnight ago, succumbed to injuries on Thursday evening. Earlier in the day, a 49-year-old woman was attacked in Kolathur. She too died of injuries, later.