நான் கலைஞரின் பேரன்.... ஸ்டாலினின் மகன்... அரசியல் களத்தில் உதயநிதி!
முக ஸ்டாலின் மகன் நடிகர் உதயநிதியும் அரசியல் களத்தில் இறங்கியிருக்கிறார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தில் புதிய அரசியல் வாரிசாக களமிறங்கியுள்ளார் ஸ்டாலின் மகன் உதயநிதி.
திமுகவில் எம்ஜிஆர் இருந்த காலத்தில் அவருக்கு போட்டியாக முக முத்துவை களமிறக்கினார் கருணாநிதி. இதனால் ஏற்பட்ட கலகக் குரலில் திமுக உடைந்தது.
பின்னர் திமுகவில் ஸ்டாலின் மெல்ல மெல்ல ஏறுமுகம் காட்டினார். அப்போது வைகோ கட்சியின் உயர் பதவிகளுக்கு நெருங்கியவராக முன்னேறியிருந்தார். இதனால் வைகோ திமுகவில் இருந்து வெளியேற்றப்பட ஸ்டாலினுக்கான முட்களற்ற பாதை உருவாக்கப்பட்டது.
அழகிரி, கனிமொழி
ஆனாலும் ஸ்டாலினுக்கு குடைச்சலாக அழகிரியும் கனிமொழியும் கருணாநிதியின் இருபுறமும் நின்றனர். இதனால் அழகிரி டெல்லியில் மத்திய அமைச்சராக பதவியேற்று திரும்பும்போது இங்கே துணை முதல்வராகியிருந்தார் ஸ்டாலின்.
டெல்லி பிரதிநிதி
அதேபோல் கனிமொழியும் அறிவிக்கப்படாத டெல்லி பிரதிநிதியாக ராஜ்யசபா எம்பியாக்கப்பட்டார். இப்போது அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் யார் பெரியவர் என மோதல் வெடிக்க அழகிரி திமுகவைவிட்டே வெளியேற்றப்பட்டார்.
ஸ்டாலின் குடும்பம்
இதன்பின்னர் ஸ்டாலின் மட்டுமல்ல அவரது குடும்பத்தின் கையும் திமுகவில் ஓங்கிவிட்டது. ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் எப்படியும் திமுகவின் பட்டத்து இளவரசராக மகுடம் சூட்டுவார் என்பது திமுகவினருக்கு தெரிந்த சங்கதிதான். ஏற்கனவே ஸ்டாலினின் செயல்பாடுகளை அடுப்படி அரசியல்தான் தீர்மானித்துக் கொண்டிருக்கிறது.
திமுக மேடைகளில்....
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தமது ரசிகர் மன்றங்களை பலப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். அதே கையோடு இப்போது திமுக மேடைகளிலும் ஏறி வருகிறார். ஒருபக்கம் கருணாநிதியும் ஸ்டாலினும் இருக்கும் படங்கள்,..மறுப்பக்கம் அதற்கு சமமாக உதயநிதியின் படங்கள் என பிளக்ஸ்போர்டுகளும் விளம்பரங்களும் தூள் பறக்கின்றன.
உதயநிதி பேச்சு
இந்த மேடைகளில் பேசும் உதயநிதியும், நான் கலைஞரின் பேரன்... ஸ்டாலினின் மகன் என்பதில்தான் பெருமைப்படுகிறேன். அதற்காக மட்டுமே இந்த மேடையில் நிற்கிறேன் என கூறி நடிகராக பார்க்காமல் திமுககாரனாக பாருங்கள் என தன்வயப்படுத்தும் முயற்சியில் மும்முரமாகியுள்ளார். ஆம் திமுகவின் இளைஞரணித் தலைவராக எந்த நிமிடத்திலும் உதயநிதி ஸ்டாலின் மகுடம் சூட்டப்படலாம்.. இதை எதிர்ப்பார் யாருமே இல்லை என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.