பத்ரகாளி அம்மன் சிலையிலிருந்து உடுக்கை சத்தம்.. பண்ருட்டி அருகே பக்தர்கள் பரவசம்!
கடலூர்: பண்ருட்டி அருகேயுள்ள, ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயிலில் தினமும் உடுக்கை சத்தம் கேட்பதால் பக்தர்கள் கோயிலை சுற்றி திரண்டு வழிபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகரையடுத்த சீரங்குப்பம் கெடிலம் ஆற்றங்கரையில் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு, மகா கும்பாபிஷேகம், கடந்த ஆண்டு நடைபெற்றுள்ளது. கோயில் அருகேயுள்ள, வெளிப்புறத்தில், காளியம்மன் 21 அடி உயரத்தில், 10 கைகளை கொண்டவளாக காட்சி தருகிறாள்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக, பிற்பகல் 11:30 மணியிலிருந்து, 12:00 மணிக்குள், பத்ரகாளியம்மன் கையில் உள்ள உடுக்கையில் இருந்து உடுக்கை சத்தம் எழும்புவதாக கூறப்படுகிறது. இந்த சத்தத்தை கேட்பதற்காவே, கடந்த சில வாரங்களாக, ஊர்மக்கள் தினமும் பகலில் அம்மன் சிலை அருகே கூடுகின்றனர்.
உடுக்கை சத்தம் வருவது கேட்பதாக கூறும் மக்கள், பக்தி பரவசத்துடன் கை கூப்பி வணங்கி, பல்வேறு வேண்டுதல்களை முன்வைக்கின்றனர். இதுகுறித்து அறிந்த பக்கத்து ஊர் மக்களும், மதியம் வந்து உடுக்கை சத்தம் கேட்டு, தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.