அப்துல் கலாம் சமாதியில் அஞ்சலி செலுத்திய 'உடுமலை' கலாம்!
ராமேஸ்வரம்: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட ஒருவர் ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலைபேட்டை ஆறுமுகம் நகரை சேர்ந்தவர் ஷேக்மைதீன்,55. இவர் பெயிண்டிங் காண்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். இவர் பார்ப்பதற்கு அப்துல் கலாம் போன்று காணப்பட்டதால் ஷேக்மைதீனை உள்ளூர் மக்கள் 'உடுமலை கலாம்' என அழைக்கத் துவங்கினர்.
கடந்த 2005ம் ஆண்டு தனது முகத்தில் இருந்த மீசையை எடுத்துள்ளார். மீசை இல்லாத ஷேக்மைதீனின் தோற்றம் அப்துல்கலாமின் தோற்றத்தை போன்று காணப்பட்டுள்ளது.உருவத்தில் மட்டுமல்லாது அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதிலும் கலாமை போன்றே விளங்க வேண்டும் என கருதிய ஷேக்மைதீன் 'அப்துல்கலாம் நற்பணி மன்றம்' ஒன்றை துவக்கியுள்ளார்.
உடுமலையில் உள்ள காமராஜர் நற்பணி இயக்கத்துடன் இணைந்து எழை, எளிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குவது, விளையாட்டு போட்டிகள் நடத்துவது, வயது முதிர்ந்தவர்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவது என பல சமுதாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது சேவைகளை அப்துல்கலாமும் நேரில் பாராட்டியுள்ளார்.
இந்நிலையில், அப்துல்கலாமின் இறுதி அஞ்சலி நிகழ்சியில் கலந்து கொள்ள முடியாத ஷேக்மைதீன் புதன்கிழமையன்று பேக்கரும்பில் உள்ள கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்திருந்தார். கலாமின் தோற்றத்தை போல் உள்ளவரை அவரது நினைவிடத்தில் கண்ட மற்றவர்கள் ஆச்சரியத்துடன் அவரை பற்றி விசாரித்தனர். ஏராளமானோர் அப்துல் கலாமுடன் இணைந்து செல் போனில் போட்டோ எடுத்து கொண்டனர்.
பின்னர் ராமேஸ்வரத்தில் உள்ள கலாமின் இல்லத்தில் இயங்கி வரும் 'கலாம் கேலரி'யை பார்வையிட்டார் ஷேக்மைதீன். அப்போது அங்கு வந்த மற்ற பார்வையாளர்கள் ஷேக்மைதீனிடம் 'நீங்கள் கலாம் சாருக்கு என்ன உறவு?' என' கேட்டனர். சிறிது நேரம் அங்கிருந்த ஷேக் மைதீன் இதன் பின் சொந்த ஊருக்குக் கிளம்பினார்.