ஜூலை 3-வது வாரத்தில் மருத்துவக் கலந்தாய்வு.. தமிழக சுகாதாரத்துறை தகவல்!
தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு ஜூலை 3ம் வாரத்தில் தொடங்கும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை : நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஒரு வாரத்தில் விநியோகிக்கப்படும் என்ற தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இதே போன்று நீட் தேர்வு நடத்தப்பட்ட முறையில் குளறுபடிகள் இருப்பதால் நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என்று மாணவர்கள் நீதிமன்றத்தை அணுகினர். இதனையடுத்து உச்சநீதிமன்ற அனுமதியுடன் சிபிஎஸ்இ இன்று நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது.
வழக்கமாக பொறியியல் கலந்தாய்வு மற்றும் மருத்துவ கலந்தாய்வு அடுத்தடுத்து நடத்தப்படும். பொறியியல் கலந்தாய்விற்கான விண்ணப்ப விநியோகம் முடிந்து ரேண்டம் எண்களும் வெளியாகியுள்ள நிலையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களே இன்னும் விநியோகிகப்படவில்லை.
நீட் தேர்வால் இது தாமதப்படுத்தப்படுவதாக சொல்லப்பட்ட நிலையில் இன்று முடிவுகள் வெளியானதால் ஒரு வாரத்தில் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஜூலை 3வது வாரத்தில் கலந்தாய்வு நடக்கும் என்று கூறப்படுகிறது.
அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் கலந்தாய்வு தொடங்கிய பின்னரே தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது. விண்ணப்பங்கள் அனைத்தும் அச்சடிக்கப்பட்டு தயாராக உள்ள நிலையில் விரைவில் எப்போது விண்ண விநியோகம் தொடங்கும் என்ற அறிவிப்பு வெளியாகும் என்று சுகாதாரத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.