உகாண்டாவில் இருந்து வந்து நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு எபோலா இல்லை
நெல்லை: நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயல்பட்டினத்தைச் சேர்ந்தவருக்கு எபோலா காய்ச்சல் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் காசிம். அவர் கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவர் விடுமுறையில் கடந்த மாதம் சொந்த ஊர் திரும்பினார்.
ஊருக்கு வந்த இடத்தில் அவருக்கு திடீர் என்று காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திருச்செந்தூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர்.
அவர் ஆப்பிரிக்க நாட்டில் இருந்து வந்துள்ளதாக கூறியதால் ஒரு வேளை அவருக்கு எபோலா வைரஸ் தாக்குதல் இருக்குமோ என்று மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவரை நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று மாலையில் அவர் நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் குழு அவரை தீவிர பரிசோதனை செய்தது.
இந்நிலையில் இது குறித்து மருத்துவக் கல்லூரி டீன் துளசிராம் கூறுகையில்,
காசிமுக்கு சாதாரண காய்ச்சல் தான் உள்ளது. அவருக்கு வேறு எந்த நோய்க்கான அறிகுறிகளும் இல்லை என்றார்.