சுடுகாட்டில் மட்டும் சாதியை ஒழிக்க முடியவில்லை: ஆ.ராசா வேதனை
நாட்டில் இன்னமும் சுடுகாட்டில் சாதியை ஒழிக்க முடியவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.
தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசியில் நெல்லை மேற்கு மாவட்ட திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்தி திணிப்புக்கு எதிர்ப்புத்தெரிவித்தும் திமுக மாணவர்கள் கருத்தரங்கம் மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் தங்கவேலு முன்னிலை வகித்தார்.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியதாவது: "இந்தி படிப்பது அவரவர் விருப்பம், இந்தி படிக்க கூடாது என்பது எங்களது கருத்தல்ல. வசதி, வாய்ப்புக்கள் இருந்தால் அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ளலாம் அதுவேறு, இந்தியை மத்திய அரசு திணிக்க கூடாது என்றுதான் சொல்கிறோம்.
இந்தியின் பெயரில் மக்களை சிதறடித்ததை இணைத்தவர் கருணாநிதிதான்.இந்தியாவில் இன்னும் எவ்வளவோ முன்னேற்றம் அறிவியலில் கண்டாலும் சுடுகாட்டில் மட்டும் ஜாதியை ஒழிக்க முடியவில்லை." என்றார்.