நெல்லையப்பர் கோயிலில் யுனஸ்கோ குழு ஆய்வு… பக்தர்கள் அதிர்ச்சி
நெல்லையப்பர் கோயிலை ஆய்வு செய்வதற்காக யுனஸ்கோ குழுவினர் நேரில் சென்றனர். இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருநெல்வேலி: நெல்லை கோயிலுக்கு யுனஸ்கோ குழுவினர் ஆய்வுக்கு வந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரெங்ராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் அளித்துள்ள மனுவில், தமிழகத்தில் புராதான சின்னங்களாக விளங்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில்களில் கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்பு ஆகம விதிகளின்படி சீரமைக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இதையடுத்து நீதிமன்ற வழிகாட்டுதலின் படி மதுரை மீனாட்சியம்மன் கோவில், நெல்லை நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட கோயில்களின் கட்டமைப்புகள் குறித்து யுனேஸ்கோவின் இந்தியப் பிரதிநிதிகள் மற்றும் தொல்லியல் துறை வல்லுனர்கள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். இடிந்து விழும் நிலையில் இருந்த பகுதிகளை அவர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
இதற்கிடையே, இக்குழுவினர் கோயிலுக்கு உள்ளே வந்த போது பக்தர்கள் பேரவையை சேர்ந்த 15 பெண்கள் உள்பட 25 பேர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக பாரம்பரிய கோயில்கள் எங்களுக்கு சொந்தமானது. அந்நியர்களுக்கு இடமில்லை என கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். அந்த ஆய்வை முடித்து கொண்ட அவர்கள் தொடர்ந்து நாங்குநேரி வானுமாமலை கோயிலுக்கு ஆய்வுக்கு புறப்பட்டு சென்றனர்.