நீட் தேர்வு முடிவைப் பார்த்து வேதனை அடைந்தேன்.. பொன்.ராதாகிருஷ்ணனுக்கு குசும்ப பாருங்க!
நீட் தேர்வு முடிவைப் பார்த்து வேதனை அடைந்ததாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சேலம் : நீட் தேர்வு முடிவுகளைப் பார்த்து வேதனை அடைந்திருப்பதாகவும், இது மாணவர்கள் குற்றம் இல்லை என்றும் மாநிலப் பாடத்திட்டம் சரியில்லாததே காரணம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது முதலே தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டத. இதற்கு காரணமே இன்றி அனைத்தையும் எதிர்க்கக் கூடாது, தேர்வு நடந்தால் தாக் அதுபற்றி தெரிய வரும். தமிழக மாணவர்கள் திறமையானவர்கள் அவர்கள் நிச்சயம் நீட் தேர்வில் வெற்றி பெறுவார்கள் என்றெல்லாம் பாஜகவின் முடிவை ஏற்பதற்கான சப்பை கட்டுகள் கட்டப்பட்டன.
நீட் தேர்வு நடைமுறை குறித்த சர்ச்சையும், தமிழில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தது என்று சொல்லப்பட்ட கருத்தையும் விமர்சித்த தமிழிசை சௌந்தரராஜன் எளிமையான கேள்விக்கு என்ன அளவுகோல் என்று கூறியிருந்தார். இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நீட் தேர்வு முடிவுகளை பார்த்த தான் வேதனை அடைந்ததாக கூறியுள்ளார்.
கல்வித் தரம் இல்லை
இதற்கு மாணவர்கள் மேல் குற்றம் இல்லை, மாநில அரசின் பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடு தான் காரணம். அரசு பள்ளிகளில் கல்வித்தரம் மிகவும் மோசமாக உள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்வதில்லை என்ற புகார்கள் உள்ளது.
மாற்றம் வேண்டும்
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அதேபோல அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகளுக்கும் பயிற்சி அளித்து அவர்களுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும். இதே நிலை நீடித்தால் தமிழக மாணவர்கள் மிக மோசமான நிலைக்கு செல்ல வேண்டியதாகிவிடும்.
அரசு ஏமாற்றுகிறது
தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஒருசில நல்ல முடிவுகளை எடுக்கிறார். ஆனால் அதை வேகமாக செயல்படுத்த வேண்டும். தமிழக மாணவர்களை மக்கள் பிரதிநிதிகளான அரசியலவாதிகள் ஏமாற்றுகிறார்கள். நீட் தேர்வு கிடையாது என்று அரசியல்வாதிகள் கடைசி வரை உறுதி அளித்தனர். ஆனால் மத்திய அரசு நீட் தேர்வை நடத்தி விட்டது.
தமிழ்நாட்டிற்கு தேவையா?
அரசியல்வாதிகளின் தவறான அணுகுமுறையாலேயே தமிழக மாணவ - மாணவிகள் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு காரணம். அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர், அவர்களது குழந்தைகளையும் அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். பெரும்பாலான கல்வி நிறுவனங்களை அரசியல்வாதிகளே நடத்துகிறார்கள். தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவர்களை பற்றி கவலைப்படாத இந்த அரசு தமிழ்நாட்டிற்கு தேவையா?