மாட்டிறைச்சி ஒரு மதத்தின் உணவா.. ஏற்க மறுக்கிறார் பொன்.ராதா
மாட்டு இறைச்சியை ஒரு மதத்தோடு ஒப்பிட்டு கொச்சைப்படுத்தக்கூடாது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்: மாட்டிறைச்சி என்பது ஒரு மதத்தினருடைய உணவு என்பதையே ஏற்றுக்கொள்ள முடியாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு நேற்று நாடு முழுவதும் விதிக்கப்பட்ட தடை பலர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது :
"நாட்டின் பாரம்பரியத்தில் பசுக்களை விவசாயிகளின் உற்ற தோழனாகவும், பசு, காளை, எருதுகளை, இன்னும் அதிகமாக வழிபடும் தெய்வமாகவும் கருதுகிறார்கள். இடைக்கால பழக்கத்தில் பசுக்களை பராமரிக்க முடியாமல் விவசாயிகள் விற்பனை செய்தனர்."
ஆனால் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க பிரதமர் மோடி பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். எனவே மத்திய அரசின் இந்த முடிவை அரசியலாக்க வேண்டாம். மாட்டிறைச்சி ஒரு மதத்தின் உணவு என சொல்ல முடியாது. ஒரு மதத்தை கொச்சைப்படுத்தக்கூடாது. இந்த மாமிசத்தை சாப்பிட்டால்தான் அந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மிருகங்களாக இருந்தாலும் அதை நேசிக்க வேண்டும். உணவு என்பது இங்கு பிரச்னையே இல்லை. குதிரையை தெய்வமாக கொண்டாடும் நாடுகளும் இருக்கிறது. குதிரையை வதைக்க கூடாது என நாடுகளில் சட்டம் இருக்கிறது. நம் கால்நடைகள் அழிந்துவிடாமல் காக்கப்பட வேண்டும். சம்பந்தமே இல்லாமல் ஒரு மதத்தோடு இதை ஒப்பிட்டு ஓட்டுவங்கியாக மாற்றுகிறார்கள்" இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.