கூடங்குளத்தில் 3 மற்றும் 4 ஆவது அணு உலைகள் 2020க்குள் சாத்தியம் – மத்திய அரசு உறுதி
நெல்லை: நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் 3 ஆவது மற்றும் 4 ஆவது அணு உலைகள் வருகின்ற 2020 ஆண்டில் இருந்து செயல்படத் தொடங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் ரஷியா ஆதரவுடன் அணுமின் நிலையம் நிறுவப்பட்டு உள்ளது.
இங்கு தலா 1000 மெகாவாட் திறனுள்ள 2 உலைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ள நிலையில், அங்கு மேலும் 2 உலைகள் அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.
அணுசக்திதுறை அமைச்சர் பதில்:
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய அணுசக்தி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று எழுத்து மூலம் பதிலளித்தார்.
இரண்டு புதிய அணு உலைகள்:
கூடங்குளத்தில் தலா 1000 மெகா வாட் திறனுள்ள 3 மற்றும் 4 ஆவது அணு உலைகள் அமைக்கும் திட்டங்களுக்கான நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கி உள்ளது.
அனுமதிகளும் தயார்:
இந்த திட்டத்துக்காக அனைத்து சட்ட ரீதியான அனுமதிகளும் பெறப்பட்டு உள்ளன. மேலும் இந்த 2 உலைகளின் கட்டுமான பணிகளுக்காக இடம் தயார் நிலையில் உள்ளது.
2016 இல் தொடக்கம்:
இந்த உலைகள் அமைக்கும் பணிகளை அடுத்த ஆண்டு அல்லது 2016 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
2020 ஆம் ஆண்டில் செயல்படும்:
பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும் இந்த 3 மற்றும் 4 ஆவது அணு உலைகளை 2020 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.