அக்னி நாயகன் அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திய ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடல்
ராமேஸ்வரம்: இந்திய மக்களை மீளாத்துயரத்தில் ஆழ்த்திவிட்டு தான் பிறந்த ராமேஸ்வரம் மண்ணில் அமைதியாக துயில் கொண்டுள்ளார் மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம். மண்ணின் மைந்தனுக்கு அஞ்சலி செலுத்த எப்போதும் அமைதியாக இருக்கும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலே இன்று ஆர்ப்பரித்து அடங்கியதாம்.
இந்துக்களின் புண்ணிய பூமியான ராமேஸ்வரம் இனி இந்தியாவின் புனிதபூமியாக போற்றப்படும் என்பதில் சந்தேகமில்லை. பிறக்கும் குழந்தை அழுது கொண்டே பிறக்கிறது. அதைப் பார்த்து தாய் சிரிக்கிறாள். உறவினர்கள் சிரிக்கிறார்கள். ஆனால் ஒருவர் மரணிக்கும் போது அவரது பிரிவை எண்ணி இந்த உலகமே அழுதால் அதுதான் அவர் மீது மக்கள் கொண்ட அன்பினால்தான்.
அப்துல் கலாம் மரணத்தில் இதை கண்கூடாக காண முடிந்தது. மாரடைப்பினால் திங்களன்று மரணமடைந்த அப்துல்கலாம் உடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரதிற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ராமேஸ்வரத்திற்கு வந்திருந்தனர். பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் என சுமார் 2 லட்சம் பேர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
வரிசை வரிசையாக அஞ்சலி
விஐபிக்களுக்கும் பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்துவதற்கு தனித்தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை 6 மணிக்கு கலாமின் அண்ணன் முகமது முத்துமீரா லெப்பை மரைக்காயர் மற்றும் உறவினர்கள் மலரஞ்சலி செலுத்தினர். கலாம் உடலுக்கு அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என சுமார் 2 லட்சம் பேர் அஞ்சலி செலுத்தினர்.
கண்ணீர் கடலில் மூழ்கியது
அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்தவுடன், கலாமின் உடல் ராணுவ வாகனம் மூலம் ராமேஸ்வரம், முஸ்லிம் தெருவில் உள்ள அவரது சகோதரர் முகம்மது முத்துமீரா லெப்பை மரைக்காயர் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. உடல் வைக்கப்பட்டிருந்த வாகனம் மக்கள் கடலில் மிதந்தவாறு, வீட்டிற்கு சென்றடைந்தது. அங்கு கலாமின் குடும்பத்தினர், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இறுதிச்சடங்கு
கலாமின் வீட்டில், இன்று காலை உறவினர்களால் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. அதன்பிறகு வீட்டின் அருகே உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் வளாகத்திற்கு உடல் எடுத்துச்செல்லப்பட்டு அங்கு ஜமாத்தார்கள் சார்பில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக பேக்கரும்பு என்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
குவிந்த மக்கள் கூட்டம்
அப்துல் கலாமின் புகழுடன் வைக்கப்பட்ட வாகனம் சென்றபோது பல்லாயிரக்கணக்கான மக்களும் வாகனத்தின் பின்னால் சாலைகளில் ஓடினர். கண்ணீரோடு தங்களின் தலைவனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற காட்சியை தொலைக்காட்சியில் நேரடியாக பார்த்தவர்களின் கண்களில் கண்ணீர் பெருகிறது.
ஆர்பரித்த அக்னி தீர்த்த கடல்
பேக்கரும்பு கிராமத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி, 6 மாநில முதல்வர்கள், முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் இன்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து பாரம்பரிய முறைப்படியும், முழு ராணுவ மரியாதையுடனும் காலை 11 .30 மணிக்கு அவரது உடல் நல்அடக்கம் செய்யப்பட்டது. அக்னி ஏவுகணை நாயகனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அக்னி தீர்த்தக்கடலும் கூட ஆர்பரித்துப் பொங்கி தனது அஞ்சலியை அந்த மாமனிதருக்கு செலுத்தியது.
அமைதி துயில்
மக்களின் மனங்களிலும், மாணவர்களின் மனங்களிலும் எண்ணற்ற நல்ல எண்ணங்களை விதைத்து விட்டு தான் பிறந்த மண்ணில் அமைதியாக துயில் கொள்ளச் சென்று விட்டார் அப்துல் கலாம். அவர் புதைக்கப்படவில்லை. மக்களின் மனங்களில் விதைக்கப்பட்டிருக்கிறார். அது விருட்சமாக வளரும் என்பதில் சந்தேகமில்லை.